இன்னும் 6 ஆண்டில் வங்கிகளே இருக்காது... அமிதாப் கண்ட் அதிரடி தகவல்
இந்தியாவில் இன்னும் 5 அல்லது 6 ஆண்டுகளில் வங்கிகளே இல்லாத நிலை உருவாக வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது என்று நிதி ஆயோக் அமிதாப் கண்ட் கூறியுள்ளார்.
டெல்லி: நாட்டில் அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில், பெரும்பாலான வங்கிகள் மூடப்படும் என்ற அபாயம் இருப்பதாக நிதி ஆயோக் தலைமை செயலதிகாரி அமிதாப் கண்ட் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமிதாப் கண்ட் பேசுகையில், " அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் வங்கிகள் மெல்ல மூடப்படும். எதிர்காலத்தில், வங்கிகளை நடத்த ஆகும் செலவுகளை ஈடுகட்டுவது பெரும் சுமையாக மாறும்.
மொபைல் போன்கள் மூலமும், இணைய இணைப்புகள் வழியாகவும் பண பரிமாற்றம் நடப்பதால் வங்கிகள் டிஜிட்டல் வளர்ச்சியில் முன்னோக்கிச் செல்கின்றன. இந்த தொழிநுட்ப வளர்ச்சியால் கடன் வேண்டுபவருக்கு விரைவில் கடன் அளிக்க முடியும். இதனால் கடன் அளிக்கும் நிறுவனங்களின் பணி எளிதாகும்.
நாடு முழுவதும் கடந்த 45 ஆண்டுகளில் 28 நிறுவனங்களுக்கு மட்டுமே வங்கி நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 18 மாதங்களில் மட்டும், 21 பேமெண்ட் வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது." என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவே டிஜிட்டல் வளர்ச்சியில் முன்னோக்கிச் செல்கிறது என்று மத்திய அரசு சார்பில் சொல்லப்பட்டாலும், உலகிலேயே அதிக அளவில் கிராமங்களைக் கொண்ட நாடான இந்தியாவில், 5 ஆண்டுகளில் மொபைல் மற்றும் இன்டர்நெட் வசதிகளை கையாளும் அளவுக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.