உச்சகட்டத்தில் கேரள காங்கிரஸ் கோஷ்டி பூசல்- சோனியா வருகையை புறக்கணித்தார் உம்மன்சாண்டி!!
கொச்சி: கேரள மாநிலம் சென்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மாநில முதல்வர் உம்மன்சாண்டி புறக்கணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநில காங்கிரஸ் தலைவராக சுதீரன் அண்மையில் நியமிக்கப்பட்டார். இதற்கு முதல்வர் உம்மன்சாண்டி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
தமது எதிர்ப்பை கடந்த சில நாட்களாகவே பகிரங்கமாகவே உம்மன்சாண்டி வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் கொச்சிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று சென்றார்.
அங்கிருந்து லட்சத்தீவில் உள்ள மினிக்காய் தீவில் நடைபெறும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு சோனியா சென்றார். ஆனால் சோனியாவை வரவேற்க உம்மன்சாண்டி செல்லவில்லை.
சோனியாவை வரவேற்க உம்மன்சாண்டி செல்லாதது அம்மாநில காங்கிரஸில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸில் பூசல் உச்சகட்டத்தை எட்டியிருப்பது அக்கட்சியினரிடையே கலக்கத்தையும் ஏற்பட்டுள்ளது.