சமயத்திற்கு ஏற்ப கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் மார்க்சிஸ்டுகள்- உம்மன் சாண்டி
திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியானது பாரதீய ஜனதா கட்சிக்கு எதிரான தனது கொள்கை மற்றும் அணுகுமுறையை சமயத்திற்கு ஏற்ற வகைகளில் மாற்றிக் கொள்கிறது என கேரள முதல்வர் உம்மன் சாண்டி குற்றம்சாட்டியுள்ளார்.
கேரளாவில் நவம்பர் 2 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வயநாடு பகுதியில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி மதவாத சக்திகளுக்கு எதிரான தனது அணுகுமுறையில் எந்த வகையிலும் வீரியத்தை குறைத்து கொள்ளவில்லை. எப்பொழுதும் அவர்களுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது.
எமர்ஜென்சி காலத்தில் சங் பரிவாருடன் கை கோர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி செயல்பட்டது. கடந்த 1977 ஆம் ஆண்டில் காங்கிரசுக்கு எதிராக போராட ஜன சங்கத்துடன் இடது சாரி கட்சிகள் கை கோர்த்து செயல்பட்டபொழுது விஜயன் எங்கு போனார் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன் என சாண்டி கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்து பேசிய விஜயன், 1977 ஆம் ஆண்டில் தனது கட்சியின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில், அன்று இருந்த காங்கிரஸ் அரசினால் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. அப்போது அழிக்கப்பட்ட ஜனநாயகத்தை திரும்ப கொண்டு வருவதற்கான போராட்டம் அது என கூறியுள்ளார்.
எமர்ஜென்சியின் தவறை சாண்டி புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் ஜன சங்கம் பிரபலமடைவதற்கு அது ஒரு தளம் அமைத்து கொடுத்து விட்டது என கூறியுள்ளார்.