குஜராத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க காங்கிரசுடன் இணைந்து பாக். சதி.. மோடி பரபரப்பு குற்றச்சாட்டு
காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு உள்ளதாக பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த சனிக்கிழமை வாக்குப்பதிவு நடந்தது. மிச்சமுள்ள 93 தொகுதிகளுக்கு, 2வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் வருகிற 14ம் தேதி நடக்கிறது.
தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மோடி, பனஸ்கந்தா உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசினார். அப்போது, தன்னை விமர்சனம் செய்திருந்த மணிசங்கர் ஐயரை கடுமையாக சாடினார்.

பாகிஸ்தான் அதிகாரியுடன் சந்திப்பு
மோடி கூறியதாவது: மணிசங்கர் ஐயர் டெல்லியில் உள்ள தனது வீட்டில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி, பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர், இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை அழைத்து ரகசியமாக பேசியதாக மீடியாக்களில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு 3 மணி நேரம் நடந்து இருக்கிறது.

அகமதுபட்டேலுக்கு பாக். அதிகாரி ஆதரவு
இதைத் தொடர்ந்துதான் மறுநாள் அவர் என்னை இழிபிறவி என்று பேசி அவமதித்தார். இது மிகவும் மோசமான, கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மணிசங்கர் ஐயர் பாகிஸ்தான் நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியது ஏன் என்பது குறித்து அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்கவேண்டும்.
பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் சர்தார் அர்ஷத் ரபிக், குஜராத் மாநில முதல்வராக அகமது பட்டேலை (காங்கிரஸ் சீனியர் தலைவர் மற்றும் ராஜ்யசபா எம்.பி) நியமிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

பாகிஸ்தான் ஆதரவு
பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தின் உளவு பிரிவில் முக்கிய பதவி வகித்தவர்கள் அகமது பட்டேலை முதல்வராக்க நியமிக்கவேண்டும் என்று ஏன் கூறுகின்றனர்? என்பதை மக்கள் யோசிக்க வேண்டும். பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி குஜராத் தேர்தலில் தலையிடுகிறார். அதேநேரத்தில், பாகிஸ்தான் தலைவர்கள் மணிசங்கர் அய்யர் வீட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகளால் நிறைய சந்தேகங்கள் எழுகின்றன. எனவே காங்கிரஸ் நாட்டு மக்களுக்கு விளக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வெளியுறவு அமைச்சகத்திற்கு தெரியாமல்
அதேபோல அகமதாபாத்தில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறும்போது, குஜராத்தில் தேர்தல் பிரசாரம் நடைபெறும் நிலையில் பாகிஸ்தான் தூதரை காங்கிரஸ் தலைவர்கள் மன்மோகன் சிங், மணிசங்கர் ஐயர், ஹமீது அன்சாரி ஆகியோர் டெல்லியில் சந்தித்து பேசியிருக்கின்றனர். மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்துக்கு தெரியாமல் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பை நடத்தியது எதற்காக? இதுபோன்ற சதித்திட்டங்கள் பற்றி மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications