சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவில் நிலம் வாங்கியதாக பாகிஸ்தான் முதியவர் கைது... !
காஸியாபாத், உ.பி.: உத்தரப்பிரதேச மாநிலம் நஹல் என்ற கிராமத்தில் நிலம் வாங்கியதாக பாகிஸ்தா் நபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இவருக்கு வயது 70 என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில்தான் வசித்து வருகிறார். தொடர்ந்து விசாவைப் புதுப்பித்து தங்கி வருகிறார். இவர் சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவில் நிலம் வாங்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவரது பெயர் முகம்மது இத்ரீஸ். இவர் நஹல் கிராமத்தில் தனது மனைவி மற்றும் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு நிலம் மற்றும் அசையைச் சொத்துக்கள் உள்ளன.
இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட எப்படியோ வாக்காளர் அடையாள அட்டையை வாங்கியுள்ளார். மேலும் இவரது இரு மகள்களும் இந்தியாவில் தான் பிறந்துள்ளனர். அவர்களை டெல்லியில் பிறந்தவர்களுக்கே மணம் முடித்துக் கொடுத்துள்ளார்.
இத்ரீஸ் போலீஸாரிடம் கூறுகையில், நான் பிரிக்கப்படாத இந்தியாவில் 1940களில் பிறந்தேன். எனது தந்தை நஸர் முகம்மது தநது குடும்பத்துடன் 1947ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தபோது எனக்கு வயது 5 அல்லது ஆறு இருக்கும்.
எனக்கு 18 வயதாகும் போது நான் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுடன் இந்தியாவுக்குத் திரும்பினேன். அதேபோல எனது உறவினர்களும், எங்களது பூர்வீக கிராமத்திற்குத் திரும்பி வந்தனர். நஹல் கிராமம்தான் எனது பூர்வீக கிராமம். அங்கு நான் விவசாயம் பார்த்து வருகிறேன். நான படிக்கவில்லை. எனவே எனக்கு சட்ட திட்டங்கள் தெரியவில்லை என்று கூறியுள்ளார் இந்த முதியவர்.
இவரை 30 வருடங்களுக்கு முன்பு அதிகாரிகள் பாகிஸ்தானுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர். ஆனால் முறையான விசாவுடன் இத்ரீஸ் மீண்டும் இந்தியா திரும்பினார். அன்று முதல் தொடர்ந்து விசாவைப் புதுப்பித்து தங்கி வருகிறார்.
இந்த விவகாரம் குறித்து போலீஸ் அதிகாரி சிவ் சிங் கூறுகையில், இத்ரீஸ் அடிப்படையில் பாகிஸ்தான் குடிமகன். எனவே அவர் இந்தியாவில் நிலம் வாங்க முடியாது. ஆனால் அவர் விவசாய நிலத்தை வாங்கியுள்ளார். இந்தியாவின் சட்டம் குறித்துத் தெரிய வந்ததும் தனது நிலத்தை தனது பிள்ளைகள் பெயருக்கு மாற்றி விட்டார். மேலும் 60 ஆண்டுகள் இந்தியாவில் வசித்ததைக் காரணம் காட்டி வாக்காளர் அடையாள அட்டையையும் வாங்கியுள்ளார். எனவேதான் அவரைக் கைது செய்துள்ளோம்.
அவர் இங்கு தங்குவதில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் சட்டத்திற்குப் புறம்பாக நிலம் வாங்கியதுதான் தவறு என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.