அதிகரிக்கும் பதற்றம்.. எல்லையில் இந்திய வீரர்கள் குவிப்பு.. சீனாவுக்கு பதிலடி கொடுக்க அதிரடி
லடாக்: கிழக்கு லடாக் எல்லையில் உள்ள பாங்காங் டிசோ ஏரியில் 2வது பாலம் கட்டி பதற்றத்தை ஏற்படுத்துவதால் முன்னெச்சரிக்கையாக எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாங்கிகள், ராணுவ வீரர்கள் விரைந்து செல்ல வசதியாக பாலம், சாலைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
இந்தியா-சீனா இடையே அடிக்கடி எல்லை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. சீனா, இந்தியாவின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
சீனாவின் இத்தகைய செயல்பாட்டுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் எல்லை அருகே சீனா தனது உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இது செயற்கைக்கோள் படங்களின் மூலம் இந்தியா உறுதி செய்தது.
குவாட் மாநாடு நடக்கும் நிலையில்.. திடீரென கிட்ட வந்த பைட்டர் ஜெட்கள்! ஜப்பானை சீண்டும் சீனா-ரஷ்யா!
சீனாவின் 2வது பாலம்
கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் டிசோ ஏரியில் முதலில் சீனா தரப்பில் புதிதாக பாலம் கட்டப்பட்டது. தற்போது 2வது பாலம் கட்டும் பணியை சீன ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இந்த 2வது பாலம் 11 மீட்டர் அகலத்தில் 70 டன் எடையைக் கையாளும் திறன் கொண்டதாக கட்டப்பட்டு வருகிறது. இது பாங்காங் டிசோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளை இணைக்கும் வகையிலும், அதன் அருகே ராணுவ முகாமும் உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் எல்லை பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதன்மூலம் ராணுவ தளவாடங்கள், வீரர்களை சீனா எளிதில் எல்லைப்பகுதிக்கு கொண்டு வர முடியும்.
போர் விமானங்கள்
மேலும் சீனா தரப்பில் ருடாக் தளம், பாங்காங் டசோவின் தெற்கு பகுதி, பிரச்சனைக்குரிய சின்ஜியாங் இராணுவ பகுதியில் உள்ள சியாதுல்லா ஆகிய இடங்களில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஹோட்டன் விமானப்படை தளத்தில் போர் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராணுவ தளபதி ஆய்வு
இதனால் எல்லையில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் வகையில் சீனா செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இந்தியாவின் புதிய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டி இந்த மாத துவக்கத்தில் கிழக்கு லடாக்கில் ஆய்வு செய்தார். அப்போது, எல்லையில் இந்திய ராணுவத்தின் செயல்பாடு பற்றியும், வீரர்களின் நிலைநிறுத்தங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய வீரர்கள் நிலைநிறுத்தம்
கிழக்கு லடாக்கில் 1597 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்தியா-சீனா இடையே எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதி உள்ளது. இங்கு இந்திய ராணுவ வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டு இருப்பதை மனோஜ் பாண்டே ஆய்வு செய்தார். அப்போது இந்தியா ராணுவத்தின் செயல்பாடுகளை பார்த்து அவர் திருப்தி அடைந்தார்.
முன்னெச்சரிக்கை பணிகள்
இந்நிலையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் முன்னெச்சரிக்கையாகவும் இந்திய ராணுவம் செயல்பட்டு வருகிறது. அதன்படி இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவசர காலத்தில் டாங்கிகள் மற்றும் ராணுவ தளவாடங்களை வேகமாக டவுலெட் பெக் ஓல்டி வரை எடுத்து செல்ல வசதியாக கல்வான் ஆற்றின் மீதான 7 பாலங்கள், சாலைகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கு முன்பு நடந்தது என்ன?
முன்னதாக 2020 மே 5ல் இந்தியா- சீனா இடையே பாங்காங் ஏரி பகுதியில் பிரச்சனை ஏற்பட்டது. கிழக்கு லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் இடையே மோதல் நடந்தது. அதேபோல் 2020 ஜூன் மாதம் 15ல் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். மொத்தம் 42 சீன வீரர்கள் இறந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் தற்போது எல்லையில் இந்திய வீரர்கள் உஷார் நிலையில் உள்ளனர்.