பெண்களின் பாதுகாப்பிற்காக செல்போன்களில் 'பேனிக் பட்டன்': சென்போன் நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சு
டெல்லி: பெண்களின் பாதுகாப்பை கருதி பேனிக் பட்டன் கொண்ட செல்போன்களை தயாரிக்க செல்போன் நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பாஜகவின் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு சார்பில் மாணவர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
பெண்களின் பாதுகாப்பிற்காகவும், அவசர சூழலில் இருந்து தப்பிக்கவும் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசனை கேட்கப்பட்டது. அதற்கு பலர் அவசர மெசேஜ் அனுப்பும் வசதியுடன் கூடிய நெக்லஸ், பிரேஸ்லெட், மோதிரம் அணியலாம் என்று பரிந்துரைத்தனர். நாம் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்.
பெண்கள் என்ன கைதிகளா, அவை அனைத்தையும் அணிந்து செல்ல. மேலும் அந்த ஆபரணங்கள் அனைத்து பெண்களுக்கும் கிடைக்கும் என்றும் கூற முடியாது. அதனால் செல்போன்களில் பேனிக்(பீதி) பட்டனை அறிமுகப்படுத்தும் ஐடியாவை அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி செல்போன்களில் ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய பேனிக் பட்டன் வைக்கப்படும். பெண்கள் ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொண்டால் அந்த பட்டனை அழுத்தினால் அவர் இருக்கும் இடத்தின் விபரம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள எண்களுக்கு மெசேஜ் மூலம் செல்லும். பேனிக் பட்டன் வைப்பது குறித்து செல்போன் தயாரிப்பாளர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த புதிய திட்டம் சில மாதங்களில் அமல்படுத்தப்படும்.
பாஜக அரசு பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்துள்ளனது. போதிய அளவுக்கு திட்டங்கள் உள்ளன. அதை அமல்படுத்துவதில் தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications