சிறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் நிஜம்தான்.. கர்நாடக காங். தலைவரின் பிஏ பரபர வாக்குமூலம்
சசிகலாவுக்காக சிறை அதிகாரிகளுக்கு ரூ2 கோடி லஞ்சம் தந்தது உண்மையே என கர்நாடகா காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரின் பிஏ பிரகாஷ் பரபரப்பு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
டெல்லி: சசிகலா சொகுசாக இருக்க பெங்களூரு சிறை அதிகாரிகளுக்கு ரூ2 கோடி லஞ்சம் தந்தது உண்மைதான் என கர்நாடகா காங்கிரஸ் கட்சி தலைவர் பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷ் டெல்லி போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக வெளியாகி உள்ள தகவல் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கை டெல்லி போலீஸ் விசாரித்து வருகிறது. டெல்லியில் தினகரனின் புரோக்கர் சுகேஷூக்கு ரூ10 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது புகார்.
மல்லியுடன் தொடர்பில் பிரகாஷ்
ரூ10 கோடியை ஹவாலா மூலம் சுகேஷூக்கு பணம் கொடுத்தது தினகரனின் உதவியாளர் மல்லிகார்ஜூனா என்கிறது டெல்லி போலீஸ். இந்த மல்லிகார்ஜூனாவின் செல்போன்களை ஆராய்ந்த டெல்லி போலீஸ் பிரகாஷ் என்பவருடன் அடிக்கடி பேசியிருப்பதை கண்டுபிடித்தது.
பரமேஸ்வரின் பிஏ
கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரின் உதவியாளர்தான் இந்த பிரகாஷ். கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் கர்நாடகா மாநில உள்துறை அமைச்சர் பதவியை பரமேஸ்வர் ராஜினாமா செய்திருந்தார்.
டெல்லி போலீசில் வாக்குமூலம்
பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். அப்போது, சசிகலாவுக்காக கர்நாடகா சிறை அதிகாரிகளுக்கு ரூ2 கோடி லஞ்சமாக கொடுத்ததாக மல்லிகார்ஜூனா தம்மிடம் கூறியிருந்தார். ஆனால் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என வாக்குமூலம் அளித்திருக்கிறார் பிரகாஷ்.
பரமேஸ்வருக்கு தொடர்பு இல்லை
சசிகலாவுக்காக ரூ2 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் பரமேஸ்வருக்கு எந்த ஒரு தொடர்புமே இல்லை எனவும் பிரகாஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளதாகவும் டெல்லி போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இத்தகவலை டெக்கான் க்ரானிக்கல் ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.