பெற்றோரை கொன்று எரித்து தப்பியோடிய சைக்கோ மகன் கைது - கேரள போலீஸ் தீவிர விசாரணை
திருவனந்தபுரம்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் வேலை பார்த்த ஓய்வு பெற்ற பேராசிரியர் மற்றும் மனைவி உட்பட நான்கு பேரை துண்டு துண்டாக வெட்டி எரித்து கொன்றுள்ளார் பேராசிரியரின் சைக்கோ மகன். திருவனந்தபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய மகனை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் வரலாறு பேராசிரியராக வேலை பார்த்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற அழகியமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ராஜதங்கம்.
இவர் தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரம் நந்தங்கோடு பகுதியில் தனது மனைவி ஜீன்பத்மாவுடன் வசித்து வந்தார். ஜீன்பத்மா இதய சிகிச்சை மருத்துவராகும். அரசு மருத்துவமனையில் பணியாற்றினார்.
சைக்கோ மகன்
இத்தம்பதிகளின், மகள் கரோலின் கேரள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். மகன் கேடல் ஜீன்சன்ராஜா. மருத்துவர் படிப்பு படித்த இவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கம்யூட்டர் நிறுவனம் நடத்த முயற்சி மேற்கொண்டு வந்தார்.
தப்பியோட்டம்
இந்நிலையில் இன்று அந்த வீட்டில் இருந்து மகன் கேடல் ஜீன்சன்ராஜ் ரத்த கரை படிந்த துணியுடன் காம்போண்ட் சுவர் ஏறி குதித்து ஓடுவதை பார்த்த அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அவரது வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்து வீட்டில் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த நான்கு பேரும் துண்டு துண்டாக வெட்டி எரிந்துகொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
போலீஸ் விசாரணை
இது சம்பந்தமாக திருவனந்தபுரம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு வந்த போது நான்கு உடல்களும் எழுபது சதவீதம் எரித்த நிலையில் காணப்பட்டது இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தியபோது அவரது மகன் நான்கு பேரையும் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துவிடு தப்பி ஓடிய தடயங்கள் கிடைத்ததாக தெரிகிறது.
மகன் கைது
மகனின் புகைப்படத்தை வெளியிட்டு 9497990007, 9497987006, 9747001090 ஆகிய எண்களில் இவரை பற்றி தெரிந்தால் தெரிவிக்க போலீசார் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். தொடர்ந்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மகன் மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடிவந்த நிலையில் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் வைத்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம், காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.