ராஜ்யசபாவிலும் நிறைவேறியது நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா! முடிவுக்கு வந்தது 'கொலிஜியம்' நடைமுறை!!
டெல்லி: உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான ஆணையத்தை ஏற்படுத்தும் மசோதா ராஜ்யசபாவிலும் இன்று நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் நியமனத்துக்கான கொலிஜியம் நடைமுறை என்பது முடிவுக்கு வந்துள்ளது.
1993ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகளைக் கொண்ட நீதிபதிகள் நியமன பரிந்துரை குழு (கொலிஜியம்)தான் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமித்து வருகிறது. இதில் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கே அதிக அதிகாரம் இருந்து வந்தது.
இந்த நியமன முறை குறித்து அண்மைக்காலமாக சர்ச்சைகள் வெடித்தன. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்துக்கான ஆணையம் ஒன்றை அமைக்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு நேற்று முன்தினம் தாக்கல் செய்தது.
இந்த ஆணையமானது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் 2 பேர், உறுப்பினர்கள் 2 பேர், மத்திய சட்ட அமைச்சர் ஆகிய 6 பேரை கொண்டதாக அமையும். இதுதான் இனிமேல் நீதிபதிகளை நியமிக்கும்.
இந்த மசோதா மீது லோக்சபாவில் விவாதம் நடைபெற்று ஒரு சில திருத்தங்களும் கொண்டுவரப்பட்டு நேற்று ஒரு மனதாக நிறைவேறியது. ராஜ்யசபாவிலும் இந்த மசோதா மீது இன்று விவாதம் நடைபெற்றது.
விவாதத்தின் முடிவில் நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மொத்தம் 176 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மூவர் மட்டும் எதிர்த்து வாக்களித்தனர்.
இதனைத் தொடர்ந்து இம்மசோதா ராஜ்யசபாவிலும் நிறைவேறியது. இம்மசோதா நிறைவேறியதால் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கான கொலிஜியம் நடைமுறை என்பது முடிவுக்கு வந்துள்ளது.