எல்லாம் இருக்கட்டும், அவ்வளவு பாதுகாப்பான பதன்கோட் தளத்திற்குள் தீவிரவாதிகள் எப்படி நுழைந்தார்கள்?
பதன்கோட்: பாதுகாப்பான பதன்கோட் விமானப்படை தளத்திற்குள் தீவிரவாதிகள் எப்படி நுழைந்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.
ஒவ்வொரு முறை தீவிரவாத தாக்குதல் நடந்த பிறகும் எது தவறாக போயிருக்கும் என ஆய்வு நடத்தப்படும். பதன்கோட் தாக்குதலை பொருத்தவரை தீவிரவாதிகளை அழிக்க ராணுவம் ஏன் முன்வரவில்லை என்ற கேள்வி எழுகிறது.
நாட்டிலேயே பாதுகாப்பு படையைச் சேர்ந்த 4 மற்றும் 9வது துணை ராணுவப்படை போன்று தீவிரவாதிகளை எதிர்த்து யாராலும் போராட முடியாது. ஆனால் அந்த இரண்டு யூனிட் வீரர்களும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியில் உள்ளனர். பதன்கோட்டில் தேசிய பாதுகாப்பு படையினருக்கு பதில் அவர்களை பணியமர்த்தியிருக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
பதன்கோட் விமானப்படை தளத்திற்கு யார் பொறுப்பு என்பதே தெரியவில்லை. மேலும் அந்த தளத்தை தீவிரவாதிகள் தாக்கப் போவதாக உளவுத் துறை தெரிவித்தும் ஏன் தேசிய பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தேசிய பாதுகாப்பு படையினருக்கு பதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 4 மற்றும் 9வது துணை ராணுவப்படையை அனுப்பியிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்திருந்தால் தீவிரவாதிகளை அழிக்க இவ்வளவு நேரம் எடுத்திருக்க மாட்டார்கள் என்கிறார்கள் நிபுணர்கள்.
2001ம் ஆண்டு நாடாளுமன்றம் தாக்கப்படும் முன்பு தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவ தளத்தை தாக்க முயற்சித்தனர். அவர்கள் ராணுவ தளத்தின் சுவரில் ஏறும்போதே துணை ராணுவத்தினர் அவர்களை சுட்டுக் கொன்றுவிட்டனர்.
பதன்கோட் விமானப்படை தளத்தில் இருந்த பொருட்கள் சேதம் அடையாமல் பாதுகாப்பு படையினர் பார்த்துக் கொண்டனர் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள் அந்த விமானப்படை தளத்திற்குள் எப்படி நுழைந்தார்கள் என்பது தான் புரியவில்லை. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்தபோது எல்லாம் பாகிஸ்தான் பதன்கோட் விமானப்படை தளத்தை தாக்கத் தான் குறி வைத்தது. 10 அடி உயர சுவரில் தீவிரவாதிகள் எப்படி ஏறினார்கள் என்று தெரியவில்லை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
முதலில் 2 தீவிரவாதிகள் விமானப்படை தளத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த நேரத்தில் பிற தீவிரவாதிகள் உள்ளே நுழைந்ததாக புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. எல்லாம் இருக்கட்டும் அவ்வளவு பாதுகாப்பான தளத்திற்குள் தீவிரவாதிகள் எப்படி நுழைந்தார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.