பதன்கோட் விமானப்படை தளத்தை உளவு பார்க்க தீவிரவாதிகளுக்கு உள்ளூர்வாசிகள் உதவினார்களா?
பதன்கோட்: பதன்கோட் விமானப்படை தளத்தை தாக்கிய தீவிரவாதிகள் முன்பே அங்கு வந்து உளவு பார்த்துள்ளனர் என்று நம்பப்படுகிறது. அவர்களுக்கு விமானப்படை தளத்தை பற்றி நன்கு தெரிந்த யாராவது உதவியிருப்பார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 7 பேர் பலியாகினர். தீவிரவாதிகள் 6 பேரும் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது.
உளவு
2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள விமானப்படை தளத்தை முன்பே உளவு பார்க்காமல் தீவிரவாதிகளால் இவ்வளவு எளிதில் நுழைந்திருக்க முடியாது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்பே
தாக்குதல் நடத்த சில வாரங்களுக்கு முன்பு ஒன்று அல்லது இரண்டு தீவிரவாதிகள் பதன்கோட் விமானப்படை தளத்தில் உளவு பார்த்திருக்கக்கூடும் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.
அந்த 2 பேர்
விமானப்படை தளத்திற்கு முதலாவதாக வந்த 2 தீவிரவாதிகள் தான் முன்பே உளவு பார்த்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. தீவிரவாதிகள் உளவு பார்க்க உள்ளூர்வாசிகள் யாராவது உதவினார்களா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தீவிரவாதிகள்
தீவிரவாதிகள் விமானப்படை தளத்திற்கு வந்த விதத்தை பார்த்தால் அவர்களுக்கு அது பழக்கமான இடம் போன்று உள்ளது. 2 தீவிரவாதிகள் ஜனவரி 1ம் தேதியே அங்கு வந்துவிட்டனர். மற்ற 4 தீவிரவாதிகள் விமானப்படை தளத்திற்கு வர காலதாமதம் ஆகிவிட்டது. அவர்கள் தொலைத்தொடர்பு கருவியை குர்தாஸ்பூர் எஸ்.பி.யின் வாகனத்தில் மறந்து வைத்துவிட்டதால் முன்பே சென்ற 2 தீவிரவாதிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.
தாமதம்
4 தீவிரவாதிகள் விமானப்படை தளத்திற்கு வர காலதாமதம் ஆனதால் ஜனவரி 1ம் தேதி நடத்தவிருந்த தாக்குதல் 2ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் விமானப்படை தளத்திற்குள் புகுந்து அங்கிருக்கும் ராணுவ என்ஜினியர்கள் ஷெட்டில் பல மணிநேரம் ஒளிந்துள்ளனர். அப்படி என்றால் அவர்களுக்கு விமானப்படை தளத்திற்குள் உள்ள இடங்கள் நன்கு தெரிந்துள்ளது என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.