குளித்துக் கொண்டிருந்த ஐடி ஊழியரை ரகசியமாக செல்போனில் படம் பிடித்த பெயிண்டர் கைது!
பெங்களூரு: பில்டிங்கிற்கு பெயிண்ட் அடிக்க வந்த இடத்தில், ஐடி நிறுவன பெண் ஊழியர் குளிப்பதை செல்போனில் படம் எடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு பிடிஎம் லேஅவுட் 1வது ஸ்டேஜில் பி.ஜி எனப்படும் பணிக்கு செல்லும் பெண்களுக்கான தனியார் விடுதி உள்ளது. இங்கு சுமார் 30 பெண்கள் தங்கியபடி வேலைக்கு சென்று வருகின்றனர்.
அதில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாளவிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஐடி நிறுவன ஊழியரும் தங்கியிருந்தார். சம்பவத்தன்று காலை 8 மணியளவில், குளிப்பதற்காக மாளவிகா பாத்ரூம் சென்றார். குளித்துக் கொண்டிருந்தபோதுதான் எதேர்ச்சையாக ஜன்னல் வழியாக வெளியே பார்த்துள்ளார். பக்கத்து பில்டிங்கில் ஒரு வாலிபர் இவர் குளிப்பதை செல்போனில் படம் எடுத்தபடி நின்றது அப்போது தெரியவந்தது.
இதையடுத்து, ஆடைகளை உடுத்தியபடி, பாத்ரூமை விட்டு வெளியே ஓடிவந்த மாளவிகா, விடுதி உரிமையாளரிடம் விஷயத்தை கூறியுள்ளார். உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார் விடுதி உரிமையாளர்.
போலீசார் வந்து விசாரணை நடத்தியபோது பக்கத்து பில்டிங்கிற்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு வந்த நபர்தான் வீடியோ எடுத்தது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்புதான் அந்த வாலிபர் பெயிண்ட் அடிக்கும் வேலையை தொடங்கியுள்ளார். பக்கத்து பில்டிங்கில் பெண்கள் குளிக்கும் நேரத்தை கணக்கிட்டுக் கொண்டு இந்த செயலில் அவர் இறங்கியுள்ளார்.
கைதான பெயிண்டருக்கு எதிராக இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 354 (c)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களின் மாண்புக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும், இச்சட்டத்தின்படி, குற்றவாளிக்கு அதிகபட்சம் 2 வருட சிறை தண்டனை கிடைக்கும்.