நாடு முழுவதும் 8 ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயமாக்குங்கள் - சுப்ரீம் கோர்ட்டில் மனு
நாடுமுழுவதும் 8ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு ஹிந்தி மொழி பாடத்தை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஹிந்தி மொழி பாடத்தை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் ஒற்றுமையையும் வலிமையையும் அதிகரிக்கும் பொருட்டு ஹிந்தி மொழியை கட்டாயமாக்க பள்ளிகளுக்கு மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.
1968-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மும்மொழி கொள்கையின் அம்சங்களை சுட்டிக் காட்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. டெல்லி செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான அஷ்வினி குமார் உபத்யாய், மும்மொழி கொள்கையின்படி ஹிந்தி பேசும் மக்கள் உள்ள மாநிலங்களில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் மார்டன் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும். அதேபோல், ஹிந்தி அல்லாத மாநிலங்களில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி கற்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.