வடகிழக்கு மாநிலங்களில் ரயில்பாதை அமைக்க ரூ.28 ஆயிரம் கோடி- மோடி அறிவிப்பு
கோஹிமா: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் புதிய ரயில்வே பாதை அமைக்க மத்திய அரசு ரூ.28 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
நாகாலாந்தின் புகழ்பெற்ற ஹார்ன்பில் பாரம்பரிய விழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். நாகாலாந்து மக்களின் பாரம்பரிய ஆடை, தொப்பியை அவர் அணிந்திருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, இந்தியாவிற்குள்தான் நாகாலாந்து இருந்தும் கடந்த 10 ஆண்டுகளில் எந்த பிரதமரும் இங்கு வரவில்லை. வாஜ்பாய்க்கு பிறகு தற்போது நான் வந்திருக்கிறேன். இனி இதுபோல அவ்வப்போது வருவேன்.

நாகாலாந்து இயற்கை செழுமை மிகுந்த மாநிலமாகும். இங்கு சுற்றுலாத் துறையில் ஏராளமான முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வருவார்கள். இங்கு இயற்கை பொருளாதார மண்டலங்களை உருவாக்க வேண்டும் என்பது எனது விருப்பம். சிறப்பு பொருளாதார மண்டலம் பிற மாநிலங்களுக்கு என்றால், நாகாலாந்துக்கு இயற்கை பொருளாதார மண்டலங்கள் சிறந்தது.
வடகிழக்கு மாநிலங்களில் புதிதாக 14 ரயில் பாதைகளை அமைக்க ரூ.28 ஆயிரம் கோடி பேக்கேஜ் அளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 2000 மாணவர்கள், 500 ஆசிரியர்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதன் மூலம் வடகிழக்கு மாநில மக்களுக்கு பிற பகுதிகளைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும். நாகாலாந்து மக்கள் ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர்கள்.
வடகிழக்கு மாநிலங்களில் 2 ஜி செல்போன் சேவையை உருவாக்கி சிறந்த தொலைத் தொடர்பை அளிக்கும் வகையில் மத்திய அரசு ரூ.5 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. இவ்வாறு மோடி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications