"வார் ரூமில்" முப்படை தளபதிகளுடன் முதல் முறையாக மோடி நாளை முக்கிய ஆலோசனை
டெல்லி: நாட்டின் முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
ஜம்மு காஷ்மீர எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மற்றொரு பகுதியில் சீனா தொடர்ந்து ஊடுருவல் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார். முப்படை தளபதிகளான அருப் ராஹா (விமானப்படை), தல்பீர் சிங் சுஹாக் (ராணுவம்), ஆர்.கே. தொவான் (கடற்படை) ஆகியோருடனான நாளைய ஆலோசனையின் போது எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத்தக்க அளவிலான தயார் நிலையில் முப்படைகள் இருக்கின்றனவா என்பதை முழுமையாக மோடி ஆராய்வார்.
விமானப்படை தளபதி அருப் ராஹா, முப்படைகளின் பொதுவான பிரச்சினைகள் பற்றியும், ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக்கும், கடற்படை தளபதி ஆர்.கே. தொவானும் அண்டை நாடுகளிடம் நமக்கு உள்ள சவால்கள், பிராந்திய, உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விரிவாக எடுத்துச்சொல்வார்கள்.
ராணுவ தலைமையகத்தில் வார் ரூம் என்றழைக்கப்படுகிற அறையில், பிரதமர் பதவி ஏற்ற பிறகு முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்துகிற முழு அளவிலான முதல் ஆலோசனை இது.