குறுக்கே வந்த எருமைகள்.. பிரதமர் மோடி துவக்கிய வந்தே பாரத் ரயில் விபத்து.. உருக்குலைந்த என்ஜின்
காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடி கடந்த 30ம் தேதி தொடங்கி வைத்த நிலையில் இன்று மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் காந்தி நகர் நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில் எருமை மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரயில் என்ஜின் முன்பக்கம் சேதமடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்தியாவில் இயங்கும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், ரயில்களின் பயணிகளுக்கு சொகுசு பயணத்தை ஏற்படுத்தி கொடுக்கவும் மத்திய அரசு புதிய திட்டத்தை கையில் எடுத்தது. அதன்படி ‛வந்தே பாரத்' ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. மொத்தம் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் முதல் முதலாக டெல்லி - வாரணாசி இடையே ‛வந்தே பாரத்' ரயில் இயக்கப்பட்டது. அதன்பிறகு டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே 2வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டது.
பச்சைக்கொடி அசைத்த மோடி! சீறி பாய்ந்து கிளம்பிய காந்திநகர்-மும்பை வந்தே பாரத் ரயில்! டாப் ஸ்பீட் 160
வந்தே பாரத் 2.0 திட்டம்
இதையடுத்து குஜராத் மாநிலம் காந்திநகர்-மும்பை இடையே 3வது வந்தே பாரத் ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டது. முந்தைய 2 வந்தே பாரத் ரயில்களை விட இந்த ரயிலில் தொழில்நுட்பங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி வந்தே பாரத் 2.0 எனும் திட்டத்தில் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டது. முந்தைய 2 வந்தே பாரத் ரயில்கை ஒப்பிடும்போது இதன் எடை 38 டன் அளவுக்கு குறைக்கப்பட்டு 392 டன் எடையில் உருவாக்கப்பட்டது.
தொடங்கி வைத்த பிரதமர் மோடி
இந்த ரயிலில் எக்ஸிகியூட்டிவ் பெட்டிகளில் உள்ள இருக்கைககள் 180 டிகிரி அளவுக்கு சுழலும் வகையில் உள்ளது. சேர் கார் வசதி உள்ளது. கண்காணிப்பு கேமரா வசதி உள்ளது. மேலும் 400 மிமீ முதல் 650 மிமீ உயரம் வரை ரயில் பாதையில் தண்ணீர் இருந்தாலும் இந்த ரயில் பாதுகாப்பாக இயங்கும். இதுதவிர ஆட்டோமேட்டிக் கதவுகள், 34 இன்ச் எல்சிடி டிவி வசதிகள் உள்ளன. இந்த ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படவுள்ளது. இந்நிலையில் காந்திநகர் -மும்பை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த மாதம் 30ம் தேதி குஜராத்தில் பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
குறுக்கே வந்த எருமை மாடுகள்
இதையடுத்து மும்பை-காந்தி நகர் இடையே வந்தே பாரத் ரயில் தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து குஜராத் மாநிலம் காந்திநகருக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. காலை 11:15 மணியளவில் பட்வா-மணிநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வேகமாக சென்றது. அப்போது ரயிலுக்கு நடுவே எருமை மாடுகள் கூட்டமாக வந்தன. இதையடுத்து ரயிலின் வேகம் குறைக்கப்பட்டது. இருப்பினும் ரயில் எருமை மாடுகளின் மீது மோதி நின்றது.
என்ஜின் முன்பகுதி சேதம்
இந்த விபத்தில் ரயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. நவீன தொழில் நுட்பம் மற்றும் ரயில் என்ஜின் பைலட்டுகளின் சாமர்த்தியம் ஆகியவற்றால் பயணிகள் காயமின்றி தப்பித்தனர். இதையடுத்து உடனடியாக சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள், ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ரயில் என்ஜினை சரிசெய்தனர். இதையடுத்து மீண்டும் அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.