குஜராத்தை உலுக்கிய கேபிள் பாலம் விபத்து.. பிரதமர் மோடியின் இன்றைய பிரச்சார நிகழ்ச்சிகள் ரத்து!
காந்திநகர்: குஜராத்தில் கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் சுமார் 132 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று குஜராத்தில் பிரதமர் மோடி மேற்கொள்ள இருந்த அனைத்து பயணங்களும், பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
'மோர்பி' பாலம் இடிந்து விழுந்த விபத்தில் மீட்புப்பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

விபத்து
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மிக பழமையான கேபிள் பாலம் ஒன்று உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கேபிள் பாலத்தை அம்மாநில அரசு சமீபத்தில் புனரமைத்து கடந்த 26ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று புதியதாக திறக்கப்பட்ட பாலத்தை சுற்றி பார்க்க மக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். சுமார் 500க்கும் அதிகமானோர் வந்திருந்த நிலையில் பாலம் திடீரென அறுந்து விழுந்துள்ளது. இதில் 350 பேர் ஆற்றில் விழுந்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் மக்களை மீட்பதற்குள் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கின.

நிகழ்ச்சி ரத்து
சம்பவம் நடந்த ஒரு சில மணி நேரங்களில் 97 பேர் உயிரற்ற வெறும் உடல்களாக மீட்கப்பட்டனர். இரவு தொடங்கிய மீட்புப்பணி தற்போது வரை நடைபெற்று வருகிறது. காலை நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்காக குஜராத் சென்றிருந்த பிரதமர் மோடி இன்று தான் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார். இன்று மோடி, 'பேஜ் கமிட்டி சினே மிலன்' நிகழ்ச்சியில் 'ஆன்லைன்' வாயிலாக பங்கேற்க இருந்தார். இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக பாஜக அறிவித்துள்ளது.

திட்டங்கள்
ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பாஜக குஜராத் ஊடக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் யக்னேஷ் டேவ், பாலம் விபத்தில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் இன்று(அக்.31) எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கமாட்டார் என்று கூறியுள்ளார். ஆனால், ரூ.2,900 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளன. இதில் பிரதமர் பங்கேற்கவில்லை என்றாலும் கூட துறை சார்ந்த அதிகாரிகள் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார்கள் என்று பாஜக கூறியுள்ளது.

நிவாரணம்
கேபிள் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 177க்கும் அதிகமானோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு பணியில் ராணும், கடற்படை மற்றும் விமானப்படையினர் என முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். இதில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். மாநில அரசை பொறுத்த அளவில் உயிரிழந்தோருக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பூபேந்திர படேல் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications