கற்பித்தல் வெறும் பணி அல்ல, அது வாழ்வியல் முறை: ஆசிரியர்கள் மத்தியில் மோடி பேச்சு
டெல்லி: கல்வி கற்பித்தல் என்பது வெறும் பணி அல்ல, அது வாழ்வியல் முறை எனத் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப் படுவதையொட்டி, இன்று தேசிய விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 350 ஆசிரியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் தனது பால்யகால நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை நினைவு கூர்ந்தார்.
ஆசிரியர் பணியின் சிறப்பு குறித்தும் தனது உரையில் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-
வாழ்வியல் முறை...
கல்வி கற்பித்தல் வெறும் பணி அல்ல, அது வாழ்வியல் முறை. மாறிவரும் சர்வதேச சூழலை கருத்தில் கொண்டு புதிய தலைமுறையினரை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். அவர்களது நாட்டத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை உருவாக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு ஓய்வில்லை...
ஆசிரியர்கள் எப்போதும் ஓய்வு பெறுவதில்லை. புதிய தலைமுறையினரை உருவாக்குவதில் அவர்கள் ஆவலோடு செயல்படுகின்றனர்.
ஆசிரியரின் பங்கு...
சமூகம் முன்னேற வேண்டுமென்றால், ஆசிரியர்கள் காலத்தைவிட இரு மடங்கு வேகமாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையிலும் ஆசிரியர் முக்கிய பங்கு வகிக்கிறார்.
அரசு பள்ளி மாணவன்...
அரசு பள்ளியில் படித்தவன் தான் நான். இன்னமும் எனக்கு பாடமெடுத்த ஆசிரியர்களும், நான் கற்றுக் கொண்ட பாடங்களும் அப்படியே எனது நினைவில் உள்ளது.
இரண்டு ஆசைகள்...
குஜராத் முதல்வராக பதவியேற்ற போது எனது மனதில் இரண்டு முக்கிய ஆசைகள் இருந்தது. அதில் ஒன்று எனது பால்ய பள்ளி நண்பர்களைச் சந்திக்க வேண்டும். மற்றொன்று எனக்கு பாடமெடுத்த ஆசிரியர்களை கவுரவிக்க வேண்டும் என்பது.
பூர்த்தியடைந்தது...
அதன்படி, எனது நண்பர்களை எனது இல்லத்திற்கே வரவழைத்து சந்தித்தேன். எனது ஆசிரியர்களை விழா ஒன்றில் சந்தித்து கவுரவப் படுத்தினேன். இதன்மூலம் எனது இரண்டு ஆசைகளும் பூர்த்தியடைந்தது' என இவ்வாறு அவர் பேசினார்.