பிரதமர் மோடியுடன் கீதா சந்திப்பு- பாக். தொண்டு நிறுவனத்துக்கு ரூ1 கோடி நிதி உதவி!!
டெல்லி: பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய மாற்றுத்திறனாளி சிறுமி கீதாவை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். இச்சந்திப்பைத் தொடர்ந்து கீதாவை பராமரித்த பாகிஸ்தான் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமி கீதா கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு வழிதவறி சென்றுவிட்டார். பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு செல்லும் ரயில் ஒன்றில் ஆதரவின்றி அழுது கொண்டிருந்த அவரை பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் கராச்சியில் உள்ள 'எதி' அறக்கட்டளையில் ஒப்படைத்தனர்.
தற்போது 23-வயதாகும் கீதா இதுவரை அந்த அறக்கட்டளையின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக அவரது பெற்றோரை கண்டுபிடிக்க எதி அறக்கட்டளை பல முயற்சிகளை செய்தும் பலனில்லை.
Welcome Geeta. It is truly wonderful to have you back home. Was truly a delight to spend time with you today. pic.twitter.com/DngJF2Tk31
— Narendra Modi (@narendramodi) October 26, 2015
இதனிடையே கீதா லாகூரில் இருக்கும் தகவலை அறிந்த மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவரை மீட்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதையடுத்து கீதாவை இந்தியாவிடம் ஒப்படைக்க லாகூரில் உள்ள எதி தொண்டு நிறுவனம் முன் வந்தது.
இதன்படி இன்று காலை 8.30 மணிக்கு கராச்சி விமான நிலையத்தில் இருந்து கீதா இந்தியாவுக்கு புறப்பட்டார். அவருடன் எதி தொண்டு அமைப்பின் நிறுவனர் பஹத் எதி மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேரும் விமானத்தில் வந்தனர். விமான நிலையத்தில் கீதாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
What the Edhi family has done is too priceless to be measured but I am happy to announce a contribution of Rs. 1 crore to their foundation.
— Narendra Modi (@narendramodi) October 26, 2015
இதனிடையே கீதா, பிரதமர் நரேந்திர மோடியையும் இன்று சந்தித்தார். இதனைத் தொடர்ந்து கீதாவை பராமரித்து வந்த பாகிஸ்தானின் எதி தொண்டு நிறுவனத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.