காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி! சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் முதல் பயணம்.. எப்போது தெரியுமா
ஸ்ரீநகர்: பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் ஜம்மு காஷ்மீருக்குச் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ கடந்த 2019இல் ரத்து செய்தது. மேலும், காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
அதன் பின்னரே ஆளுநரே அங்கு அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்து வந்தார். சுமார் 2 ஆண்டுகளாக அங்கு எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளும் இல்லாமல் இருந்து வருகிறது.

காஷ்மீர்
இடையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காஷ்மீரில் மீண்டும் தேர்தலை நடத்துவது குறித்த பேச்சுகள் எழுந்தது. இது தொடர்பாகப் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காஷ்மீரின் 14 முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் காஷ்மீருக்குத் தேர்தல் நடத்துவது உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் இது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

பிரதமர் மோடி
இந்தச் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 24ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்குச் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2019இல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, பிரதமர் மோடி அங்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். ஜம்மு அருகே சம்பாவில் நடைபெறும் மாபெரும் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

தாக்குதல்
பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நடைபெறும் பேரணியில் ஆயிரக்கணக்கான பஞ்சாயத்து உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே காஷ்மீரில் பல பகுதிகளில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதிலும் பல தாக்குதல்களில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் அதிகளவில் பயங்கரவாதிகளின் இலக்காக மாறியுள்ளனர். கடந்த மாதம் மட்டும் நான்கு பஞ்சாயத்து உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கட்சிகள் எதிர்பார்ப்பு
கடந்த ஜூன் 2018 முதல் காஷ்மீரில் மத்திய அரசின் ஆட்சியில் உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. டிலிமிடெஷன் செயல்முறை முடிந்த உடன் தேர்தலை நடத்துவதற்கான செயல்முறை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்தப் பேரணியில் ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது மற்றும் தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து பிரதமர் பேசுவார் என எதிர்பார்க்கிறோம் எனக் காஷ்மீர் அரசியல் கட்சிகள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications