'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்க பிரேசில் கிளம்பினார் மோடி
டெல்லி: பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரேசில் கிளம்பினார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பின் 6வது மாநாடு வடகிழக்கு பிரேசிலில் உள்ள போர்டலெசா நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் பிரேசில் கிளம்பினார். அவருடன் இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஏ.கே. தோவால், வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங் மற்றும் நிதி செயலாளர் அரவிந்த் மாயாராம் உள்ளிட்ட உயர்மட்ட குழுவும் சென்றுள்ளது.
மாநாட்டுக்கு முன்னதாக மோடி ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கலை இன்று சந்திப்பதாக இருந்தது. ஆனால் ஜெர்மனி அணி இன்று இரவு நடக்கும் ஃபீஃபா உலகக் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவுடன் மோதுவதை பார்க்க மெர்க்கல் ஸ்டேடியம் செல்வதால் அந்த சந்திப்பு ரத்தானது.
மோடி இன்று இரவு ஜெர்மனி தலைநகர் பெர்லினில் தங்கிவிட்டு நாளை பிரேசில் செல்கிறார். அவர் பிரேசில் அதிபர் டில்மா ரூசெஃப், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா ஆகியோரிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்த மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சிக்காக வங்கி ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் அந்த வங்கியின் தலைமையகத்தை எந்த நாட்டில் அமைப்பது என்பது முடிவு செய்யப்படும். பிரிக்ஸ் வங்கியின் தலைமையகம் சீனாவின் ஷாங்காய் நகர் அல்லது டெல்லியில் அமையலாம் என்று கூறப்படுகிறது.