எப்படி சிக்கியிருக்காங்க பாருங்க.. பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வந்தபோது 3 நக்சலைட்டுகள் கைது
ஹைதராபாத்தில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 3 நக்சலைட்டுகளை தெலங்கானா மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்: சுமார் 12 லட்சம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற மாவோயிஸ்டுகளை தெலங்கானா மாநில மெகபூபா மாவட்ட போலீசார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக மெகபூபா மாவட்ட மக்தல் காவல் நிலைய போலீஸ் அதிகாரி கூறியிருப்பதாவது: சமூக விரோத கும்பலுடன் தொடர்புடையதாக கருதப்படும் சிலர் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முயல்வதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தீவிர விசாரணையில் ஈடுபட்டோம். அதில் மந்தன்கோடு தபால் நிலைய அலுவலரின் உதவியுடன் பழைய ரூபாய் நோட்டுகளை சமூக விரோதிகள் மாற்ற முயற்சிப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, உடனடியாக மக்தல் காவல் நிலைய அதிகாரி தலைமையிலான போலீசார் மந்தன்கோடு கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கிளை அஞ்சல் அதிகாரி சத்திய நாராயணா சாரி வீட்டில் இரண்டு பேர் 500, 1000 ரூபாய் நோட்டு கட்டுமங்களுடன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்களது பெயர் திரிநாத ராவ், சித்தார்த் என்பது தெரிய வந்தது.ஆனால் இந்தப் பணம் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பதைக் கூற அவர்கள் மறுத்து விட்டனர்.
இவர்கள் இருவரும் ஹைதராபாபத்தில் உள்ள ஒரு என்ஜினீயரிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களை மிரட்டி பணத்தை மாவோயிஸ்டுகள் மாற்ற வைத்துள்ளனர். அதற்கு மறுத்த அவர்களிடம் மாவோயிஸ்டுகளுக்கு உதவுமாறு மூளைச் சலவை செய்துள்ளனர். அதற்காக இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை தருவதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். இந்திலையில் நவம்பர் 22-ம் தேதி முகமூடி அணிந்த 3 பேர் 2 பேக்குகளில் ரூபாய் நோட்டுகளை புதிய 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக மாற்றித் தருமாறு கூறிவிட்டு சென்றுவிட்டனர். இதனால் அந்தப் பணத்தை மாற்றுவதற்காக சத்திய நாரயணன் உதவியை நாடியுள்ளார் ராவ். இந்த நிலையில்தான் பணத்தை மாற்ற முயன்ற அந்த 3 பேரும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். அவர்களிடம் இருந்து ரூ.12 லட்சத்து ஆயிரத்து 400 ரூபாய் பழைய நோட்டுகளும், 3 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.