அடக்கொடுமையே.. காஷ்மீரில் போலீஸ்காரரே தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தார்!
காணாமல் போன காஷ்மீர் போலீஸ் கான்ஸ்டபிள் தீவிரவாத இயக்கத்தில் இணைந்தார்.
ஜம்மு காஷ்மீர் : காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த போலீஸ் கான்ஸ்டபிள் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்திருப்பது காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சிர்மால் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்தவர் இஸ்பாக் அகமத் தார். இவர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் பணிக்குச் செல்வதாக வீட்டில் இருந்து கிளம்பி உள்ளார். அதன் பின் இவரைப் பற்றியத் தகவல் எதுவும் தெரியவில்லை.

போலீஸார் இவரைத் தேடி வந்த நிலையில், நேற்று தீவிரவாதிகள் உடையுடன் கான்ஸ்டபிள் தார் கையில் ஏகே47 ஏந்தியவாறு நிற்கும் புகைப்படம் போலீஸாருக்கு வாட்ஸ்-அப்பில் வந்தது. இதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். தார் கடந்த சில நாட்களாகவே தனது வேலையில் கவனம் செலுத்தாமல் இருந்துவந்ததை விசாரணையில் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், தார் லக்ஷர்-இ-தொய்பா இயக்கத்தில் சேர்ந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மேல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். அப்படி இது உறுதியானால், இந்த ஆண்டு தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த இரண்டாவது போலீஸ் என்கிற பெருமையை(!) தார் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே மாதத்தில் சையத் நவீத் முஸ்டாக் ஷா என்கிற காவல் அதிகாரி தங்களது இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக ஹிஜபுல் முகாதீன் இயக்கம் அறிவித்தது. அதேபோல ஜாவூர் முகமத் தூக்கர் என்பவர் இராணுவப்பணியில் இருந்து தீவிரவாத இயக்கத்தில் இந்த ஆண்டு இணைந்துள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications