மீண்டும் கோவா முதல்வராகும் பிரமோத் சாவந்த்.. சுயேட்சைகள் உதவியுடன் ஆட்சி அமைக்கும் பாஜக!
பனாஜி: கோவாவில் பாஜக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், கோவா மாநில முதல்வராக மீண்டும் பதவியேற்கவுள்ளார் பிரமோத் சாவந்த்.
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து முடிந்துள்ளன. அதன் முடிவுகளும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
கோவா தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளோடு மாநில கட்சிகளும் போட்டியிட்டன. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியும், மற்ற நான்கு மாநிலங்களில் பாஜகவும் ஆட்சி அமைக்க உள்ளன.
பஞ்சாப் ஓவர்.. அடுத்த இந்த மாநிலம்தான்..காங்கிரசுக்கு வசமாக செக் வைக்கும் ஆம் ஆத்மி.. என்ன திட்டம்?
கோவா
பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கோவா பார்வேர்டு கட்சியுடன் இணைந்து போட்டியிட்டுள்ளது. இதில் காங்கிஸ் 37 இடங்களிலும் கோவா பார்வேர்டு கட்சி 3 இடங்களிலும் போட்டியிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடுகிறது. மேலும் திரிணாமுல் காங்கிரஸ் முதன்முறையாக மாநில கட்சிகளுடன் களம் இறங்கி உள்ளது.
பாஜக
கோவா மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 40 இடத்தில், பாஜக 20 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் பாஜக.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் பாஜக ஆட்சி மீண்டும் கோவாவில் வரவிருக்கிறது.
எம்.எல்.ஏ கூட்டம்
இந்நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோவாவின் அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்க, உயர்மட்ட தலைவர்களும் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.இதையடுத்து, கோவா முதல்வராக மீண்டும் பிரமோத் சாவந்த்யே தேர்வு செய்துள்ளனர். அவர் பாஜக சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பிரமோத் சாவந்த்
இதையடுத்து, கோவா மாநில முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் மீண்டும் பதவியேற்க உள்ளார். சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளையைச் சந்தித்து பிரமோத் சாவந்த் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். விரைவில் முதல்வராக பொறுப்பேற்பார். ஆட்சி அமைக்க உதவிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.