கர்நாடகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? அதை தீர்மானிப்பது இவர்கள்தான்... கணிப்புகள் சொல்லும் உண்மை
கர்நாடகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்ற உண்மையை சொல்லும் விதமாகவே கருத்து கணிப்புகள் உள்ளன.
பெங்களூர்: கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்ற உண்மையை ப்ரீபோலும் எக்சிட் போலும் சொல்கின்றன.
கர்நாடகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போதிலிருந்து அந்த மாநில தேர்தல் அனைவராலும் மிகவும் உற்று நோக்கப்பட்டது. அப்போதிலிருந்து தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகிவந்தன.
அதில் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது குறித்து தீர்மானிக்கும் சக்தியாக மதசார்பற்ற ஜனதா தளம் விளங்கும் என்று கணிக்கப்பட்டது.
தொங்கு சட்டசபை
கர்நாடகா தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என்றும் தொங்கு சட்டசபையே அமையும் என்றும் பப்ளிக் டிவி சர்வே கூறியுள்ளது. இந்த கருத்து கணிப்பின் படி காங்கிரஸ் கட்சிக்கு 89 முதல் 94 இடங்களும் பாஜகவுக்கு 86 முதல் 91 இடங்களும் மஜதவுக்கு 38 முதல் 43 இடங்களும் கிடைக்கும்.
மஜத தொகுதிகள்
அதுபோல் இந்தியா டுடே குழுமத்தின் கார்வி இன்ஸைட் கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி 90 முதல் 101 இடங்களையும் பாஜக 78 முதல் 86 இடங்களையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 34 முதல் 43 தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்சிட் போல்கள் கூறுவது என்ன?
அதுபோல் இந்தியா டுடே ஆக்ஸிஸ் கருத்து கணிப்பின்படி 22 முதல் 30 இடங்களும், டைம்ஸ் நவ் விஎம்ஆர் 31-39 இடங்களும், திக்விஜயா டிவி கணிப்பின்படி 31 முதல் 35 இடங்களும், நியூஸ் எக்ஸ் சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பில் 35- 39 இடங்களும், ஜான் கீ பாத்தில் 32 முதல் 43 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தீர்மானிப்பது இவர்கள்
எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாது என்ற நிலையில் தற்போது ஆட்சியை பிடிப்பது யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மதசார்பற்ற ஜனதா தளம் விளங்கும் என்று கருத்து கணிப்புகளின் மூலம் தெரிகிறது. சுருக்கமாக சொல்வதென்றால் மஜத கிங் மேக்கராக உருவெடுக்கும் என்பதில் ஐயம் இல்லை.