இந்திய வரலாற்றில் முதல் முறையாக மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் அதிரடி டிஸ்மிஸ்
டெல்லி: நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, மத்திய பல்கலைக்கழகம் ஒன்றின் துணை வேந்தர் பதவியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். விஸ்வ பாரதி பல்கலைக்கழக துணை வேந்தர் சுஷாந்தா தத்தாகுப்தா இவ்வாறு, குடியரசு தலைவராக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
25 பேருக்கு சட்டவிரோதமாக பணியிடம் கொடுத்தது, விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோதும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வூதியம் பெற்றுக்கொண்டது, மதுபானங்கள் வாங்கியதற்காக பல்கலைக்கழகத்திடம் பணம் பெற்றது போன்ற காரணங்களால் சுஷாந்தா தத்தாகுப்தா மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, சுஷாந்தா தத்தாகுப்தாவை பதவி நீக்கம் செய்யுமாறு, குடியரசு தலைவருக்கு, மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி கடிதம் எழுதியிருந்தார்.
முன்னதாக சுஷாந்தா தத்தாகுப்தா தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் 30ல் கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்தை ஏற்கலாம், டிஸ்மிஸ் செய்ய வேண்டாம் என்று குடியரசு தலைவர் சிபாரிசு செய்தார்.
எனவே இந்த விவகாரத்தில், மனித வள அமைச்சகத்திற்கும், குடியரசு தலைவர் ஆபீசுக்கும் நடுவே பனிப்போர் நிலவி வந்தது. ஒருவழியாக, மனித வள அமைச்சக சிபாரிசை ஏற்று, சுஷாந்தா தத்தாகுப்தாவை இன்று, பதவியில் இருந்து நீக்க குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய பல்கலைக்கழகம் ஒன்றின் துணை வேந்தர் பதவி நீக்கம் செய்யப்படுவது இந்திய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.