பிரதமராக வரவில்லை; குடும்ப உறுப்பினராக வந்திருக்கிறேன்; வீரர்களுக்கு இனிப்பு ஊட்டி பிரதமர் பேச்சு..!
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷோராவில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார் பிரதமர் மோடி.
வீரர்களுக்கு தனது கையால் இனிப்புகள் ஊட்டி மகிழ்ந்த பிரதமர் மோடி, தாம் பிரதமராக இங்கு வரவில்லை என்றும் உங்கள் குடும்ப உறுப்பினராக வந்திருக்கிறேன் எனவும் அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கின் போது அதில் இந்திய படை வீரர்கள் ஆற்றிய பங்கு அனைவரையும் பெருமையில் ஆழ்த்தும் வகையில் இருந்ததாகவும் சூரியன் மறைவதற்கு முன்னர் தாக்குதலை முடித்துவிட்டு திரும்பவேண்டும் என முடிவு செய்யப்பட்ட அந்த நாளை என்றென்றும் தாம் நினைவு கொள்வேன் எனவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரின் ரஜவுரியில்... ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுகிறார் பிரதமர் மோடி..!
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கின் போது தொலைபேசி அருகிலேயே அமர்ந்து படை வீரர்களின் நிலை குறித்து கேட்டுக்கொண்டே இருந்ததாக பிரதமர் மோடி நவ்ஷோராவில் நடைபெற்ற ராணுவ வீரர்களுடனான தீபாவளி கொண்டாட்டத்தில் பேசினார். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கின் போது இந்திய எல்லையை தாண்டி 2 கி.மீ. தூரம் வரை சென்று இந்திய படை வீரர்கள் துல்லிய தாக்குதல் நடத்தியது திரும்பிப்பார்க்கத் தக்கது.
உங்களால் தான் நாட்டு மக்கள் நிம்மதியாக உறங்குகின்றனர் என்றும் உங்களுக்காக கோடிக்கணக்கான மக்களின் ஆசியை தன்னுடன் எடுத்து வந்துள்ளேன் எனவும் பிரதமர் மோடி ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.
முன்னதாக நவ்ஷோரா வந்தடைந்த பிரதமர் மோடியை ராணுவத் தளபதி நரவேனே வரவேற்று அழைத்துச் சென்றார். ரஜவுரி மாவட்டத்தின் நிலவரம், பாதுகாப்பு பணிகள், எல்லை யுத்தம் குறித்தெல்லாம் பிரதமரிடம் அவர் விளக்கிக் கூறினார். முன்னதாக யுத்தத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவிடத்தில் மலர் வைத்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
கடந்த 2014-ம் ஆண்டு சியாச்சினில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் மோடி, 2015-ம் ஆண்டு பஞ்சாப் எல்லையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். இதேபோல் 2016-ம் ஆண்டு இமச்சல பிரதேசத்திலும், 2017-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பந்திப்போராவிலும், 2018-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநில ஹர்சில் என்ற இடத்திலும் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின்னரும் 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்திலும், 2020-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலன் ஜெய்சல்மாரிலும் பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அந்த வகையில் 8-வது ஆண்டாக இந்த முறையும் ஜம்மு காஷ்மீரின் எல்லை மாவட்டமான ரஜவுரியின் நவ்ஷோரா பகுதியில் வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடியிருக்கிறார்.