வேட்புமனுவில் மோடி திருமணத்தை மறைத்தது குற்றமே- அகமதாபாத் கோர்ட்!
அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் போது தாக்கல் செய்த வேட்புமனுவில் தமக்கு திருமணம் ஆனதை நரேந்திர மோடி மறைத்தது குற்றம்தான்.. அதே நேரத்தில் காலதாமதமாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவர் மீது தற்போது வழக்கு பதிவு செய்ய முடியாது என்று அகமதாபாத் நீதிமன்றம் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில் மனைவி பெயர் என்ன என்ற இடத்தில் எதையும் குறிப்பிடாமல் இருந்தார்.

அதே நேரத்தில் அண்மையில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் முதல்முறையாக தனது மனைவி பெயர் ஜஷோடாபென் என்று வேட்புமனுவில் மோடி குறிப்பிட்டார்.
இதனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மோடி குற்றம் செய்துள்ளதாக கூறி குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான நிஷாந்த் வர்மா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அம்மாநில போலீசில் புகார் செய்தார். ஆனால் அவரது புகாரை போலீசார் ஏற்கவில்லை.
இதைத் தொடர்ந்து அகமதாபாத் நீதிமன்றத்தில் மோடி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வர்மா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.ஷேக் நேற்று தீர்ப்பு அளித்த தீர்ப்பு விவரம்:
நரேந்திர மோடி திருமண விவரத்தை மறைத்ததன் மூலம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ (3)ன்படி குற்றம் செய்திருக்கிறார். ஆனால், இத்தகைய குற்றங்கள் பற்றி ஒரு ஆண்டுக்குள் புகார் செய்ய வேண்டும் என்கிறது குற்றவியல் நடைமுறை சட்டம்.
தற்போது ஒரு ஆண்டு 4 மாதங்கள் கழித்து தான் கூறப்பட்டுள்ளது. இதனால் காலத்தை கடந்த குற்றங்கள் தொடர்பான இப் புகாரை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.கூறினார்.
தற்போது அகமதாபாத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய நிஷாந்த் வர்மா முடிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications