நாகாலாந்து அரசாங்கத்தையும் நடுநடுங்க வைத்த சமூக வலைதளங்கள்!
தமிழகத்தைப் போல நாகாலாந்து அரசாங்கத்தை சமூக வலைதளங்களை பயன்படுத்தி பணிய வைத்துள்ளனர் இளைஞர்கள்.
கோஹிமா: ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு புரட்சிக்காக சமூக வலைதளங்களை தமிழக இளைஞர்கள் ஆயுதமாக பயன்படுத்தினர். அதைப் போல நாகாலாந்திலும் உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சமூக வலைதளங்களை பயன்படுத்தி அரசாங்கத்தையே கிடுகிடுக்க வைத்துள்ளனர் போராட்டக்காரர்கள்.
நாகாலாந்தில் 16 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. அதேநேரத்தில் நாட்டின் பிற மாநிலங்களைப் போல நாகாலாந்து உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க கோரி வழக்கும் தொடரப்பட்டது.
போராட்டம்
இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றங்கள் உள்ளாட்சித் தேர்தலை பெண்களுக்கான இடஒதுக்கீட்டுடன் நடத்த நெருக்கடி கொடுத்தது. ஆனால் நாகா இன மக்களின் அமைப்புகளோ பெண்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தன.
இளைஞர்கள் பலி
இதனிடையே உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் நாகாலாந்து மாநில அரசு முயற்சித்தது. இதனால் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. அஸ்ஸாம்- நாகாலாந்து எல்லையான திமாப்பூர் நகரத்தில் இப்போராட்டத்தின் போது போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. இதில் 2 இளைஞர்கள் பலியாகினர்.
அலுவலகங்கள் தீ வைப்பு
இச்செய்தி சமூக வலைதளங்கள் மூலமாக காட்டுத் தீயாக பரவியது. கொந்தளித்த நாகா இளைஞர்கள் தலைநகர் கோஹிமாவை போர்க்களமாக்கினர். அரசு அலுவலகங்களை இலக்கு வைத்து தீ வைத்தனர். இதனால் பல கட்டிடங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. நாகாலாந்து முதல்வர் உட்பட அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகவும் கெடு விதிக்கப்பட்டது.
சமூக வலைதளங்கள்..
நாகா இனமக்களின் இந்த தன்னெழுச்சிப் போராட்டத்தால் மாநில அரசு நடுங்கிப் போனது. இதையடுத்து இன்று அம்மாநில முதல்வர் டி.ஆர். ஜெலியாங்க் ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக குறிப்பிட்டிருக்கும் முதல்வர் அரசு கட்டிடங்களை தீ வைப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் சமூக வலைதள செய்திகளை நம்பி யாரும் வன்முறையில் இறங்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.