காஷ்மீரில் ஐ.ஸ்., பாகிஸ்தான், கொடிகள் ஏந்தி போராட்டம்..கலவரம்.. பதற்றம்
ஜம்மு: காஷ்மீரில் பண்டிட்களுக்காக தனி காலனி அமைப்பதைக் கண்டித்து பிரிவினைவாத அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது பெரும் கலவரம் வெடித்தது. இதில் கலந்துகொண்டவர்கள் பாகிஸ்தான் மற்றும் ஐ.எஸ். இயக்கத்தினரின் கொடிகளை ஏந்தி சென்றதால் பதற்றம் நிலவியது.
காஷ்மீர் பண்டிட்டுகளுக்கும், ராணுவத்தினருக்கும் தனி குடியிருப்புகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பிரிவினைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி காஷ்மீரில் பல இடங்களிலும் போராட்டம் நடத்த அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன்படி அனந்த்நாக்கில் பிரிவினைவாதிகள் போராட்டம் நடத்தினர். இதில் கலந்துகொண்டவர்கள் பாகிஸ்தான் மற்றும் ஐ.எஸ். இயக்கத்தினரின் கொடிகளை ஏந்தி சென்றதுடன் காஷ்மீர் விடுதலை கோஷங்களை முழங்கினர். மேலும் பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவான கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.
அப்போது அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்ததால் இரு தரப்பிற்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கண்ணீர்ப்புகை மற்றும் மிளகுப்பொடி குண்டுகளை வீசி கலைத்தனர்.
முன்னதாக அங்கு ஜாமியா மசூதி ஹன்பியாவில் கூடிய மக்கள் மத்தியில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர்கள் ஷேக் ரஷீத்தும், நூர் முகமது கல்வாலும், அனந்த்நாக் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்குமாறு வலியுறுத்தினர். இதே போன்று ஸ்ரீநகர், பாரமுல்லா, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.