கடனை திருப்பி செலுத்தும் திட்டத்துடன் வாருங்கள்.. நீரவ் மோடிக்கு பிஎன்பி வங்கி பதில் மெயில்
கடனை திருப்பி செலுத்தும் திட்டத்துடன் வாருங்கள் என நீரவ் மோடிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி கடிதம் எழுதியுள்ளது.
மும்பை: கடனை திருப்பி செலுத்தும் திட்டத்துடன் வாருங்கள் என நீரவ் மோடிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி கடிதம் எழுதியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ்மோடி ரூ.11,500 கோடி மோசடி செய்தது குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரத்தில் தற்போது வருமான வரித்துறையினரும் தலையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். நீரவ் மோடி தற்போது இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
கடன் ரூ.5000 கோடிதான்
இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு அண்மையில் நீரவ் மோடி ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். வங்கிக்கு தாம் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் ரூ.5,000 கோடிதான் என்று தெரிவித்தார்.
தொழில் முடங்கிவிட்டது
கடனை செலுத்த வேண்டிய வழிகளை வங்கியே அடைத்துவிட்டதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஊடகங்கள் மற்றும் வங்கி நிர்வாகம் மேற்கொண்ட அவசர நடவடிக்கைகளால் தமது தொழில் முடங்கியதாகவும் தெரிவித்தார்.
பிஎன்பி வங்கி மின்னஞ்சல்
இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் நீரவ் மோடிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் உறுதி சான்றினை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி நீங்கள் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்றுள்ளீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன
வாங்கிய கடனைக் குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்துவதாக அளித்த உத்தரவாதத்தின்படியும் நீங்கள் செயல்படவில்லை. அதன் காரணமாகவே வங்கி சார்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடனை அடைக்கும் திட்டம்
தற்போதைய சூழலில் எவ்வாறு கடனைத் திருப்பிச் செலுத்தப் போகிறீர்கள் என்பது தொடர்பான ஆக்கப்பூர்வ செயல் திட்டங்களை உடனடியாக அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் என பஞ்சாப் நேஷனல் வங்கி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.