முதல் லைனில் அடங்கியிருக்கும் மர்மம்.. ரிட்டையர் ஹர்ட் ஆன சிக்ஸர் சித்து.. யார் இவர்? என்ன பின்னணி?
சண்டிகர்: பஞ்சாப்பில் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அங்கு பஞ்சாப் முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங் திடீரென ராஜினாமா செய்தார். காங்கிரஸ் பஞ்சாப் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் தொடர் எதிர்ப்பு காரணமாகவும், பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் போதிய ஆதரவு இல்லாத காரணத்தாலும் அம்ரீந்தர் சிங் ராஜினாமா செய்தார்.
அம்ரீந்தர் சிங்கை தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வந்த சித்து அங்கு காங்கிரஸ் மாநில தலைவராக இருந்த நிலையில் அவர் முதல்வராக்கப்படுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் என்று நவ்ஜோத்திற்கு பதிலாக அவருக்கு கொஞ்சம் நெருக்கமாக பார்க்கப்பட்டவரான சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப்பின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இவரின் அமைச்சரவையும் சில நாட்களுக்கு முன் பதவி ஏற்பு செய்தது. சித்துவுடன் சரண்ஜித் நட்பாக இருப்பார் என்று கருதப்பட்ட நிலையில் அமைச்சரவையை தேர்வு செய்வதில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. .

கருத்து வேறுபாடு
அதன்படி சரண்ஜித், அமைச்சரவையில் ராணா குர்ஜீத் சிங் என்ற ஊழல் புகாரில் சிக்கிய நபருக்கு வாய்ப்பு கொடுத்தார். குர்ஜீத் சிங் அமரீந்தர் சிங்கால் முன்பே அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நபர். மாறாக சித்து தனக்கு நெருக்கமான பஞ்சாப் எஸ்டி கமிட்டி தலைவர் ராஜ் குணருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். ஆனால் அவருக்கு பதிலாக தனது உறவினர் அருணா சவுத்திரிக்கு இவர் அமைச்சரவையில் இடம் கொடுத்தார். இதை சித்து விரும்பவில்லை.
Recommended Video

ஜாதி
தன்னுடைய ஜாதியினருக்கு மட்டும் சரண்ஜித் அதிகம் இடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாகவே கட்சியில் தனக்கு மரியாதை இல்லை என்று கூறிவிட்டு காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து சித்து ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப்பில் சித்து அடித்த மிகப்பெரிய அரசியல் பல்டியாக இது பார்க்கப்படுகிறது. தேசிய அரசியல் பெரிய அளவில் கவனிக்கப்பட்டு வரும் சித்து அரசியல்வாதியாக தனது வாழ்க்கையை தொடங்கவில்லை... அவர் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர்.

கிரிக்கெட்
இவர் கிரிக்கெட் வீரராகத்தான் முதலில் பிரபலம் அடைந்தார். 19 வருடம் முதல் தர போட்டிகள், சர்வதேச போட்டிகளில் இவர் கிரிக்கெட் ஆடி இருக்கிறார். 1981ல் இவர் இந்திய தேசிய அணியில் அறிமுகம் ஆனார். ஆனால் பெரிதாக இவரின் ஆட்டம் கவனிக்கப்படவில்லை. மீண்டும் முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி 1987 ல் இந்தியா அணிக்கு திரும்பி அதே வருடம் உலகக் கோப்பை போட்டியிலும் இந்திய சார்பாக கலந்து கொண்டார். டாப் ஆர்டரில் இறங்கி பேட்டிங் செய்ய கூடியவர்.

பேட்டிங்
அப்போதே ஸ்டிரைக் ரேட் மீது கவனம் வைத்து அதிரடியாக பேட்டிங் செய்ய கூடியவர். இவர் அடிக்கும் சிக்ஸர்கள் இவருக்கு தனி ரசிகர்களை சேர்த்தது. இதனால் வெறும் சித்து "சிக்ஸர் சித்து" என்று பெயர் பெற்றார். 51 டெஸ்ட், 136 ஒருநாள் போட்டிகளில் ஆடியவர் பின்னர் ஓய்வு பெற்றார். கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பின் சில வருடங்களில் 1988ல் இவர் கொலை குற்றம் ஒன்றிலும் குற்றம் சாட்டப்பட்டார். 1988ல் டிசம்பர் மாதம் பாட்டியாலாவில் கார் பார்க்கில் காரை நிறுத்துவதற்கு ஏற்பட்ட மோதலில் குர்னாம் சிங் என்பவரை சித்து கார் ஏற்றி தாக்கியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பின் மரணம் அடைந்தார்.

கொலை
அதன்பின் வழக்குகளை எதிர்கொண்ட சித்து பஞ்சாப் உயர் நீதிமன்றம் மூலம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு மூன்று ஆண்டு சிறை தண்டனை பெற்றார். ஆனால் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் இவர் விடுதலை செய்யப்பட்டார். அந்த நபரை தாக்கிய வழக்கில் மட்டும் இவருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கு இவரின் வாழ்நாளில் கருப்பு புள்ளியாக பார்க்கப்பட்டது.
2001ல் கிரிக்கெட் காமெண்டரிக்கு வந்தவர் அப்படியே டிவி நிகழ்ச்சிகள் பக்கம் ஒதுங்கினார். அதன்பின் வரிசையாக பல டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 2012ல் பிக் பாஸ் ஹிந்தி சீசனில் கலந்து கொண்டு தமிழில் முதல் சீசன் பரணி போல சண்டைபோட்டு பாதியில் வெளியேறினார்.

காமெடி நைட்ஸ் வித் கபில்
அதன்பின் கபில் நடத்திய பிரபல இந்தி நிகழ்ச்சியான காமெடி நைட்ஸ் வித் கபில் நிகழ்ச்சியில் 2012-13 வரை விருந்தினராக இருந்தார். மற்ற பல டிவி நிகழ்ச்சிகளில் இதேபோல் கலந்து கொண்டார். இதன் மூலம் பிரபலம் அடைந்த நிலையில் இன்னொரு பக்கம் அரசியலிலும் கவனம் செலுத்தினார். 2004ல் பாஜகவில் இவர் சேர்ந்து அம்ரிட்சர் தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். 2014 வரை எம்பியாக இருந்தவர் அதன்பின் ராஜ்ய சபா எம்பியாக 2016ல் பஞ்சாப்பில் இருந்து பாஜக சார்பாக தேர்வானார்.

பாஜக
இடையில் இவர் ஆம் ஆத்மியில் சேர்வதாக இருந்தது. ஆனால் பாஜகவில் இருந்து விலகி ஆவாஸ் இ பஞ்சாப் என்ற கட்சியை தனது சகோதரருடன் தொடங்கினார். ஆனால் அடுத்த வருடமே 2017ல் இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, காங்கிரஸ் சார்பாக அமைச்சர் ஆனார். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக முதல்வர் அம்ரீந்தர் சிங்குடன் மோதல் ஏற்படவே அவருக்கு எதிராக கடுமையான வார்த்தைகளால் விமர்சனங்களை வைக்க தொடங்கினார். இந்த மோதல் முற்றவே 2019ல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

மோதல்
பின்னர் ஆட்சிக்கு எதிராக காய் நகர்த்தியவர் அம்ரீந்தர் சிங்கின் ராஜினாமாவிற்கு முக்கிய காரணமாக இருந்தார். எம்எல்ஏக்களை இவர்தான் சிங்கிற்கு எதிராக திரும்பினார். அம்ரீந்தர் சிங் ராஜினாமா செய்த பின் சித்து நிம்மதியாக இருப்பார் என்று கருதப்பட்டது. ஆனால் இப்போது அடுத்த அரசியல் பல்டியை அடித்துள்ளார். தனது கெரியரில் பல பல்டிகளை அடித்தவர் தற்போது புதிதாக காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் மேலிடத்தை குழப்பி இருக்கிறார்.

குழப்பம்
அதிலும் இந்த ராஜினாமா கடிதத்தின் முதல்வரியே மர்மமாக இருந்தது. அதில், "ஒரு மனிதன் சமசரம் செய்ய தயாராகும் போது அவனின் குணமும் வீழ்ச்சி அடைந்து விடும். நான் எப்போதும், எதற்காகவும் என் பஞ்சாப்பின் முன்னேற்றத்தில் இருந்து சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை" என்று மர்மமாக வரிகளை குறிப்பிட்டு இந்த ராஜினாமாவை அவர் செய்துள்ளார். சமரசம் என்று எதை சொல்கிறார்.. அம்ரீந்தர் சிங்கையே வீழ்த்தியவர் ஏன் புதிய முதல்வரை எதிர்க்க முடியாமல் ராஜினாமா செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பஞ்சாப்பில் சிக்ஸர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சித்து இப்படி புதிரான காரணம் ஒன்றை கூறி இப்படி ரிட்டையர் ஹர்ட் செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications