பஞ்சாப் எல்லையை ஏன் சீல் செய்யவில்லை?: மத்திய அரசு மீது பாயும் 'கூட்டணி கட்சி' முதல்வர் பாதல்
குர்தாஸ்பூர்: தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல் கிடைத்திருந்தால் மத்திய அரசு உடனே எல்லையை சீல் செய்திருக்க வேண்டும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் பர்காஷ் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தினாநகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எஸ்.பி. உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். தீவிரவாதிகள் தினாநகர் காவல் நிலையம் அருகே உள்ள கட்டிடத்தில் பதுங்கியுள்ளனர். தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து பஞ்சாப் முதல்வர் பர்காஷ் சிங் பாதல் கூறுகையில்,
தீவிரவாதம் என்பது மாநில பிரச்சனை அல்ல. அது தேசிய பிரச்சனை. தீவிரவாதிகள் பஞ்சாபில் இருந்து வரவில்லை. மாறாக எல்லையைத் தாண்டி வந்துள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல் கிடைத்திருந்தால் எல்லையை சீல் செய்வது உள்துறை அமைச்சகத்தின் வேலை ஆகும்.
ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் துணிச்சலாக போராடி வருகிறார்கள். எனக்கு உடல்நலம் சரியில்லை. இருப்பினும் ஒவ்வொரு 10 முதல் 15 நிமிடத்திற்கு ஒருமுறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலைமையை தெரிந்து கொண்டு வருகிறேன் என்றார்.