மோடி 'கலவரத்தை' மறந்துடுங்க.. பவார் அதிரடி பேச்சு!
கோலாப்பூர்: குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடியின் பங்கு குறித்த பேச்சுக்களுக்கு நாம் ஓய்வளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவரும், சமீபத்தில் டெல்லியில் வைத்து மோடியை ரகசியமாக சந்தித்தவர் என்று கூறப்பட்டவரும், லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் பாஜக கூட்டணிக்கு போவார் என்று எதிர்பார்க்கப்படுபவருமான சரத் பவார் கூறியுள்ளார்.
2002ல் குஜராத்தில் நடந்த மதவெறிக் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்த பேச்சுக்களையும், விவாதங்களையும், சர்ச்சைகளையும் நிறுத்த வேண்டும் என்று பவார் கூறியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதன் மூலம் அவர் தேர்தலுக்கு முன்பாகவோ அல்லது தேர்தலுக்குப் பின்னரோ பாஜக கூட்டணியில் இணைவது நிச்சயம் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அதுதான் கோர்ட்டுகள் சொல்லி விட்டனவே...
கோலாப்பூரில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு நீதி விசாரணை நடந்துள்ளது. அதில், மோடிக்கும், கலவரத்திற்கும் தொடர்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல மேலும் சில கோர்ட்டுகளும் கூறியுள்ளன.
பேச்சை நிறுத்துங்கள்
எனவே மோடிக்கும், கலவரத்திற்கும் தொடர்பு உள்ளது குறித்த விவாதங்களை, விமர்சனங்களை நிறுத்த வேண்டும்.
லாஜிக் சிம்பிள்தானே...
இது ஒரு சாதாரண லாஜிக்தான். நாம், கோர்ட் உத்தரவுகளை, தீர்ப்புகளை மதிக்கும் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கோர்ட் ஒரு தீர்ப்பைக் கொடுத்து விட்டால், அதுகுறித்து பேசாமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம். மோடி விவகாரத்திற்கும் இது பொருந்தும்.
ஆனாலும்.. மோடி அலை வீசவில்லை
அதேசமயம், நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவான நிலை காணப்படுவதாக நான் சொல்ல மாட்டேன். மத்தியப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், சட்டிஸ்கர் மாநிலங்களில் பாஜக வெல்ல அல்லது அதிக இடங்களைப் பெற அங்கிருந்த அரசுகள் மீதான மக்களின் அதிருப்தியே காரணம். மற்றபடி மோடி அலையெல்லாம் இல்லை.
பாஜக வென்ற மாநிலங்கள்தானே...
மேலும் அவற்றில் பல மாநிலங்களில் கடந்த பத்து அல்லது 20 வருடங்களாக பாஜகதான் தொடர்ந்து வென்று வருகிறது. இதுதான் காரணம்.
அதை வச்சு இதை சொல்ல முடியாது
சட்டசபைத் தேர்தல் முடிவுகளை வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் ஆட்சி அமைக்கும் அளவுக்கு இடங்கள் கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்க்க முடியாது.
நிலையான ஆட்சி வேண்டும்
மத்தியில் நிலையான ஆட்சி வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புகின்றனர். அதை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிதான் தர முடியும். லோக்சபா தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
அதெல்லா்ம் காங்கிரஸ் பேசப்படாது
காங்கிரஸ் கட்சியைத் தலைமை தாங்கிச் செல்வது யார் என்பது குறித்து நாம் கருத்துச் சொல்ல முடியாது. அதேபோல நமக்குத் தலைவர் யார் என்பதை காங்கிரஸும் சொல்லக் கூடாது.
10 நாளில் தொகுதிப் பங்கீடு முடியும்
காங்கிரஸுடன் எங்களுக்கு நல்லுறவு நிலவுகிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக 10 நாளில் முடிவு செய்து விடுவோம். பேச்செல்லாம் நல்ல முறையில் நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் காங்கிரஸுக்கு இதுதொடர்பாக கெடுவெல்லாம் விதிக்கவில்லை என்றார் பவார்.
10 வருடமாக
கடந்த 10 வருடமாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் பவார் கட்சி இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.