தேர்தல் கருத்து கணிப்புகள் வெறும் காமெடி... மோடி பிரதமராக சான்சே இல்லை: ராகுல் உறுதி
டெல்லி: தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் வெறும் நகைச்சுவை தான். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்துக்கணிப்புகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய கருத்துக்கணிப்புகள் லோக்சபா தேர்தலில் பாஜக ‘கை' மோலோங்கியுள்ளதாகவும், காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு குறைவு எனவும் தெரிவித்தன. தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் மற்ற எந்தக்கட்சிகளும் கூட்டணி சேர முன்வராத நிலையில் அக்கட்சி தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது.
காங்கிரஸை வெற்றி பெற வைக்க அக்கட்சித் தலைவர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நேற்று வலைத்தளம் மூலம் கட்சி தொண்டர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இந்த முறையிலான கலந்துரையாடலை ஒரு காங்கிரஸ் தலைவர் கையாள்வது இதுவே முதல்முறை. எனவே, தொண்டர்கள் ஆர்வமுடன் கேள்விகளைத் தொடுத்தனர். அந்த உரையாடலின் போது ராகுலிடன் கேட்கப் பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் கேள்வி-பதில் வடிவில் பின்வருமாறு...
100 இடங்கள் கிடைத்தால்...
தொண்டர்; கருத்து கணிப்புகள் கூறுவது போல காங்கிரசுக்கு 100 இடங்கள் கிடைத்தால் தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது?
காங்கிரசுக்கு 100 இடங்கள் தான் கிடைக்கும் என்பதெல்லாம் வெறும் நகைச்சுவை தான் என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியின் ஒட்டுமொத்த தேர்தல் பிரசாரமே உங்களை நம்பிக்கை இழக்கச் செய்வது தான். நீங்கள் நம்பிக்கை இழக்காமல் இருந்தால், நாம் அவர்களை தூக்கி எறிவோம்.
200 இடங்களுக்கு மேல்...
அப்படி எந்த சந்தேகமும் உங்கள் எண்ணத்தில் இல்லாமல் இருந்தால், நாம் 200 இடங்களுக்கு மேல் பெறுவோம். அவர்களது பிரசாரம் முழுவதுமே காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணத்தில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துவது தான்.
கடினமான தேர்தல்...
முதலில் நாம் 2004-ம் ஆண்டு தேர்தல் போட்டியிட்டபோது, ஒவ்வொரு கருத்து கணிப்பும் நாம் தோற்கடிக்கப்படுவோம் என்று தான் கூறியது. ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2009 தேர்தலிலும் கருத்து கணிப்புகள் நாம் தூக்கி எறியப்படுவோம் என்றது. நாம் இரட்டிப்பு வெற்றி பெற்றோம்.
சாதனைகள்...
இப்போது நாம் 3-வது தேர்தலை சந்திக்கிறோம். அவர்கள் காங்கிரஸ் நன்றாக செயல்படவில்லை என்று கூறுகிறார்கள். கருத்துக்கணிப்புகள் தான் சட்டம் என்ற மனோபாவத்தில் நாம் தொடங்கக் கூடாது. நாம் கடினமான தேர்தலை சந்திக்கிறோம். எதிர்க்கட்சியின் வலையில் விழுந்துவிடக் கூடாது. முடங்கி இருக்காமல் வெளியில் வந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளை மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்' என்றார்.
மோடி ஆட்சிக்கு வந்தால்...?
தொண்டர்: மோடியும் அவரது கட்சியும் ஆட்சிக்கு வந்தால், மதவாத சக்திகளை எதிர்த்து காங்கிரஸ் எப்படி போராடும்?
நாம் தான் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறப்போகிறோம். அதனால் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வரும் என்ற கேள்வியே இல்லை. அன்பு தான் எப்போதும் வெறுப்பை தோற்கடிக்கும். வெறுப்புணர்ச்சி சட்டத்தை, அன்பை வென்றதாக வரலாற்றில் ஒரு உதாரணம் கூட இல்லை. எனவே அன்பு இந்த முறையும் வெறுப்புணர்ச்சியை துடைத்தெரியும் என்றார்.
கூட்டணி கிடைக்காதது ஏன்?
தொண்டர்: சில மாநிலங்களில் வாக்குகளை அதிகம் பெற காங்கிரஸ் தன்னை எப்படி வலுப்படுத்தப் போகிறது?
ராகுல்: தமிழ்நாடு, மேற்குவங்காளம், உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் காங்கிரசுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு இது' எனத் தெரிவித்தார்.
கூட்டணி முயற்சியில் தோல்வி...
தொண்டர்: தமிழ்நாட்டில் இந்த முறை காங்கிரஸ் எந்த ஒரு கட்சியையும் கூட்டணி சேர்க்கும் முயற்சியில் தோல்வி அடைந்தது ஏன்?
ராகுல்: எதிர்காலத்தில் காங்கிரசுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழ்நாட்டில் நாம் ஒரு புதிய மாற்று சக்தியை, இளம் மாற்று சக்தியை உருவாக்க முடியும். நாம் அங்கு உண்மையில் நன்றாக செயல்பட்டு வருகிறோம். இதில் நான் உறுதியாக இருக்கிறேன்' என அவர் இவ்வாறு பதிலளித்தார்.