ஆதர்ஷ் அறிக்கையை நிராகரித்த மகாராஷ்டிர அரசுக்கு ராகுல்காந்தி எதிர்ப்பு
டெல்லி: ஆதர்ஷ் அறிக்கையை நிராகரித்த மஹாராஷ்டிர அரசின் நடவடிக்கை ஏற்புடையதல்ல என தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, விரைவில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மலிவு விலைக் கடைகள் அமைக்கப் படும் என அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மாநில சட்டசபை தேர்தல்களில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, அதை சரிசெய்து, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.
அதற்காக, காங்கிரஸ் ஆளும் 12 மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கெடுத்த ஆலோசனைக் கூட்டம் நேற்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான், மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அஜய் மக்கான் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் லோக் ஆயுக்தா அமைக்கப்படும். அப்போதுதான் விவசாயிகளும் நுகர்வோர்களும் பயனடைய முடியும். காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் பொது வினியோகம் சீர்படுத்தப்படும்' என்றார்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது :- இன்றைய சந்திப்பின் போது இரண்டு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்தோம்.அதில், ஊழல் மற்றும் லோக்பால் ஆகியவை ஆகும். காய்கறிகளின் விலை உயர்வு எங்களை மிகவும் கவலை அடையச்செய்துள்ளது.காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் மக்களவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும். ஊழலை ஒழிப்பது பற்றி பேசிக்கொண்டிருந்தால் எந்த பயனும் இல்லை.ஊழலை ஒழிப்பதாக கூறுவோர் நாடாளுமன்றத்தில் மசோதாக்களை எதிர்க்கின்றனர்.ஆதர்ஷ் அறிக்கையை நிராகரித்த மகாராஷ்டிரா அரசின் நடவடிக்கை ஏற்புடையது அல்ல. மாகாராஷ்டிரா அரசு ஆதர்ஷ் அறிக்கையை நிராகரித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆதர்ஷ் முறைகேட்டில் தவறு செய்தவர்களை பாதுகாக்கும் பேச்சுக்கே இடமில்லை' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆதர்ஷ் அறிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்ததாவது :- நாங்கள் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், நாங்கள் அவற்றில் போராடி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல், காங்கிரஸ் அல்லாத வேறு கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் ஊழல் இருக்கத்தான் செய்கிறது. அவற்றையும் மீடியாக்கள் பார்க்க வேண்டும். மேலும், ஆதர்ஷ் அறிக்கை குறித்து கட்சிக்குள் பேசி விரைவில் பிரச்சினைத் தீர்க்கப் படும்' எனக் கூறியுள்ளார்.