மோடியைப் பார்த்து அஞ்சவில்லை; காங்கிரஸ் தோற்றால் முழுப்பொறுப்பேற்பேன்- ராகுல் காந்தி
டெல்லி: தேர்தல் களத்தில் நரேந்திர மோடியைக் கண்டு அஞ்சவில்லை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றால், அதற்கான முழுப் பொறுப்பை ஏற்க தயார் என்று கூறியுள்ளார்.
டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், கூறியுள்ளதாவது:
1984ம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் காங்கிரஸ் கட்சியினர் சிலருக்கு தொடர்பு இருந்திருக்கலாம். அதற்காக மன்னிப்புக் கோரப் போவதில்லை.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்கும், குஜராத் கலவரத்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம் உள்ளது. அந்த கலவரத்தில் காங்கிரசுக்கு தொடர்பு இல்லை. ஆனால், குஜராத் கலவரத்தில் அம்மாநில பாரதிய ஜனதா அரசுக்கு தொடர்பு இருக்கிறது. சீக்கியர்கள் மீதான வன்முறையை கட்டுப்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்தது. ஆனால், குஜராத் கலவரத்தை தூண்டியதே அம்மாநில அரசு தான் என்று விமர்சித்தார்.
தேர்தல் களத்தில் நரேந்திர மோடியைக் கண்டு அஞ்சவில்லை என்றும், பாரதிய ஜனதாவை காங்கிரஸ் வீழ்த்தும் எனவும் ராகுல் உறுதிபட கூறினார்.
தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் அதற்கான முழுப் பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்ட ராகுல், பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
அரசியல் கட்சிகளை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வருவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, இது தொடர்பாக நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.