ராஜிவைப் போல ராகுலுக்கும் தொலைநோக்கு சிந்தனை இருக்கிறது.. சொல்வது பிரியங்கா
அமேதி: ராஜிவ்காந்தியை போல ராகுல்காந்திக்கும் நாடு குறித்த தொலைநோக்கு சிந்தனை இருக்கிறது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியை ஆதரித்து அவரது சகோதரி பிரியங்கா காந்தி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
அமேதி தொகுதியில் தற்போது எம்பியாக உள்ள எனது சகோதரர் ராகுல்காந்தி இத்தொகுதி மக்களின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்காக அதிக பணியாற்றியுள்ளார். எனது தந்தை ராஜிவ்காந்தி அரசியலுக்கு வந்த புதிதில் எதிர்க்கட்சிகளிடமிருந்து எந்த மாதிரியான விமர்சனங்களை சந்தித்தாரோ அதுபோலவே ராகுல்காந்தி தற்போது விமர்சனங்களை சந்தித்து வருகிறார். எனது தந்தையை போலவே இந்த நாடு குறித்த தொலைநோக்கு பார்வை ராகுல்காந்திக்கும் உள்ளது.
வெளியில் இருந்து வந்து அமேதி தொகுதியில் போட்டியிடுபவர்களுக்கு உங்களது வாக்குகளை அளிக்காதீர்கள். எங்கள் குடும்பத்தை பொறுத்தளவில் அமேதி ஒரு புனித தலம். எனவேதான் இந்த தொகுதிக்கு மட்டுமின்றி அருகாமையிலுள்ள தொகுதிகளுக்கும் ராகுல்காந்தி முடிந்த பணிகளையாற்றியுள்ளார்.
ராகுல்காந்தி இத்தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறலாம். ஆனால் இத்தொகுதிக்கு ராகுல் செய்த பணிகளை ஒரு பட்டியலைப்போல என்னால் வாசிக்க முடியும். ராகுல்காந்தியின் பணிகளால் இத்தொகுதியிலுள்ள 12 லட்சம் பெண்கள் நேரடியாக பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.