ஜூலை மாதம் ரயில்வே பட்ஜெட் தாக்கல்: சதானந்தகவுடா
பெங்களூர்: ஜூலை மாதம் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா தெரிவித்தார். கர்நாடகாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 17 எம்.பிக்களுக்கும் இம்மாநில பாஜக சார்பில் பெங்களூரில் இன்று பாராட்டுவிழா நடத்தப்பட்டது. இதில் கர்நாடகாவில் இருந்து மத்திய அமைச்சர்களாகியுள்ள சதானந்தகவுடா, வெங்கய்யநாயுடு (ராஜ்யசபா எம்.பி), அனந்தகுமார், சித்தேஸ்வர் ஆகியோரும் பங்கேற்றனர்.
நன்றி தெரிவித்து பேசிய சதானந்தகவுடா "பதிமூன்று லட்சம் ஊழியர்களை கொண்ட ரயில்வே துறையை நிர்வகிக்கும் பொறுப்பை எனக்கு அளித்த பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டு மக்கள் மற்றும் கர்நாடக மக்களின் நம்பிக்கையை நான் கண்டிப்பாக பேணி பாதுகாப்பேன்.
நாட்டு மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளனர். கர்நாடக மக்களும் 17 எம்.பிக்களை வெற்றி பெற செய்துள்ளனர். தென்மாநிலங்களிலேயே கர்நாடகாவில்தான் பாஜக அதிக இடங்களில் வென்றுள்ளது. தென்மாநிலங்களில் முதன்முறையாக பாஜக ஆட்சியமைத்த மாநிலமும் கர்நாடகாதான். இதனால் மோடிக்கு கர்நாடகா மீது தனி அன்பு உள்ளது.
மத்தியில் ஆட்சி செய்த கடந்த ஆட்சியாளர்கள் வானத்தையும், பூமியையும் கூட விற்று சாப்பிட்டுவிட்டனர். அந்த ஊழல்களை எல்லாம் சரி செய்து நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது. ஜூலை மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மத்திய ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்வேன்" என்றார்.