பலாத்காரத்தோடு சேர்த்து கொலை செய்யும் சம்பவம் அதிகரிப்பு! ஏன் தெரியுமா? அசோக் கெலாட் புது விளக்கம்
ஜெய்ப்பூர்: பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் கொண்டு வந்த பிறகு, பலாத்காரம் செய்து விட்டு கொலை செய்து விடும் சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று முன் தினம் விலை வாசி உயர்வு ,வேலை வாய்ப்பின்மை ஆகிய பிரச்சினைகளை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
டெல்லியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கலந்து கொண்டிருந்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பெட்டி அளித்த அசோக் கெலாட் கூறியதாவது:-

கொலை செய்யும் சம்பவம் அதிகரிப்பு
டெல்லியில் நடைபெற்ற நிர்பயா வழக்குக்குப் பிறகு பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்தது. இதை ஏற்று பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது. அப்போதில் இருந்தே பாலியல் வன்கொடுமை செய்து பெண்களை கொலை செய்து விடும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. நாட்டில் நிலவும் மிகவும் ஆபத்தான போக்காக இது உள்ளது.

மிகவும் ஆபத்தான போக்காகும்
பாதிக்கப்பட்ட பெண் நமக்கு எதிராக சாட்சியம் அளித்து விடுவார் என பயந்துபோய் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் நபர், பலாத்காரம் செய்த பெண்ணை கொன்று விடுவதே சரி என கொலை செய்து விடுகிறான். இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடப்பதாக தகவல்கள் வருகின்றன. இது மிகவும் ஆபத்தான போக்காகும். நாட்டில் நிலவும் இந்த நிலை நல்லதல்ல" இவ்வாறு அவர் கூறினார். கடந்த ஆண்டு கர்நாடக சட்டமன்ற முன்னாள் சபாநாயகரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கே.ஆர் ரமேஷ் குமார், ரேப் குறித்து வெளியிட்ட கருத்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சட்டத்தை மாற்றுவோம்
ரமேஷ் குமார் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் பேசுகையில் , "பாலியல் பலாத்காரத்தை தவிர்க்க முடியாத போது அதை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள் என்ற பழமொழி ஒன்று உள்ளது. நீங்களும் அந்த நிலையில் தான் இருக்கிறீர்கள் என சபாநாயாரை பார்த்து கூறினார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும் உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை விதிப்பது நியாயமற்றது. நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால், இந்த சட்டத்தை மாற்றுவோம் எனப்பேசியிருந்ததும் பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

4 பேருக்கு சிறை
கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேரால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தியது. இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேரும் கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லி திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications