ராஜஸ்தான் சட்டசபைக் கூட்டம்...முரண்டு பிடிக்கும் கெலாட்...அமைதி காக்கும் ஆளுநர்!!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை கூட்டத்தை உடனடியாக கூட்டுவதற்கு ஆளுநர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அசோக் கெலாட் ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜ் பவனுக்குள் சென்று இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு முன்னதாக ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல்வர் அசோக் கெலாட் சந்தித்து சட்டசபை கூட்டம் கூட்டுவது தொடர்பாக சந்தித்து பேசி இருந்தார்.
ஜெய்ப்பூருக்கு வெளியே ஓட்டலில் முதல்வர் அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.கள் தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று நான்கு பஸ்களில் ஆளுநர் மாளிகைக்கு வந்தனர். அவர்களுடன் அசோக் கெலாட்டும் வந்து இருந்தார். ஆளுநர் மாளிகைக்கு செல்வதற்கு முன்பாக கெலாட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வரும் திங்கள் கிழமையில் இருந்து சட்டசபையை கூட்ட ஆளுநர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

ஆளுநர் முடிவு எடுப்பார்
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட், ''அரசியலமைப்புச் சட்டத்தில் முதன்மையானவர் ஆளுநர். இதை நாங்கள் மறுக்க மாட்டோம். மேலிடத்தில் இருந்து வரும் அழுத்தம் தவிர அவரால் கூட்டத்தை நிறுத்த முடியாது என்று எங்களால் கூற முடியும். ஏன் அவர் நேற்று முடிவு எடுக்கவில்லை. மக்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். விரைந்து ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறோம். கடிதம் கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்'' என்றார்.

ஆளுநருக்கு அழுத்தமா?
சட்டசபையை கூட்டக் கூடாது என்று ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். ஆதலால் ஆளுநர் மவுனமாக இருக்கிறார் என்று கெலாட் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் நீடிக்க தற்போது போதிய எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறது. 97 பேர் மட்டுமே உள்ளனர். சச்சின் பைலட் சேர்த்து 19 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர்.

காங்கிரசுக்கு பலம் இருக்கிறதா?
அதேசமயம் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களின் ஆதரவு சேர்த்தல் காங்கிரஸ் கட்சிக்கு 103 எம்.எல்.ஏ.களின் ஆதரவு உள்ளது. ஆட்சி நடத்த 101 எம்.எல்.ஏ.களின் ஆதரவு இருந்தால் போதும்.

சச்சினுக்கு நிம்மதி
அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். ஆனால், இதை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் சச்சின் பைலட் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று முன்பு கொடுத்த அதே உத்தரவை தொடர வேண்டும் இன்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சொலிசிடர் ஜெனரல் ஆஜராவார்
இதற்கு முன்னதாக இந்த வழக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் சி.பி ஜோஷி மேல்முறையீடு செய்தார். அதில், உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்குவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரி இருந்தார். மேலும் இந்த வழக்கை விசாரிக்கும்போது தங்களையும் ஒருதரப்பாக சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கிடையே இந்த வழக்கில் மத்திய அரசையும் சேர்க்க வேண்டும் என்று சச்சின் கோரிக்கை வைத்து இருந்தார். இதை இன்று நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. தகுதி நீக்கம் செய்த எம்.எல்.ஏ.க்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழல் காங்கிரஸ் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு தரப்பில் சொலிசிடர் ஜெனரல் வாதிடுவார்.
|
சிஆர்பிஎப் படை
ஆளுநர் மாளிகையில் கெலாட் ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால், சிஆர்பிஎப் படையை ராஜ்பவனுக்குள் பாதுகாப்புக்கு அனுப்ப வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது. ராஜஸ்தான் போலீசாரின் கைக்கு சட்டம் ஒழுங்கு செல்லக் கூடாது என்று பாஜக தலைவர் ஜிசி கட்டாரியா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications