தகுதி நீக்க நோட்டீஸுக்கு எதிரான வழக்கு.. ராஜஸ்தான் ஹைகோர்ட்டில் இன்று விசார்ணை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சபாநாயகர் சிபி ஜோஷியின் தகுதி நீக்க நோட்டீஸை எதிர்த்து மாநில உயர்நீதிமன்றத்தில் சச்சின் பைலட்டும் அவரது 18 ஆதரவு எம்எல்ஏக்களும் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே நீடித்து வந்த பனிப்போர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்து பூதாகரமாக வெடித்தது. இந்த நிலையில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு பெரும்பான்மை இல்லை என கூறி 18 எம்எல்ஏக்களுடன் சச்சின் பைலட் கிளர்ச்சியை ஏற்படுத்தினார்.
இருமுறை ஜெய்ப்பூரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து சச்சின் பைலட் துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அவரது ஆதரவு இரு அமைச்சர்களும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து குருகிராமில் உள்ள ஐடிசி பாரத் ஹோட்டலில் 18 எம்எல்ஏக்களும் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு புதிய செல்போனையும் சிம் கார்டையும் கொடுத்த பைலட், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்களுடன் வீடியோ கான்பிரன்சிங்கில் அவ்வப்போது பேசி வருகிறார் என தெரிகிறது.
இந்த நிலையில் சச்சின் பைலட் மற்றும் 18 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் சிபி ஜோஷி செவ்வாய்க்கிழமை தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 17) விளக்கம் கோரிய நிலையில் சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் சச்சின் பைலட்டும் 18 எம்எல்ஏக்களும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீது வியாழக்கிழமை 3 மணிக்கு விசாரணை தொடங்கியது. சச்சின் பைலட் மற்றும் 18 எம்எல்ஏக்கள் சார்பில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஷ் சால்வேயும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகியும் ஆஜராகினர்.
அது போல் சபாநாயகர் ஜோஷி தரப்பு சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகினார். இந்த வழக்கை நீதிபதி சதீஷ் சந்த் விசாரித்தார். வாதங்கள் தொடங்கின. அப்போது ஆஜரான ஹரீஷ் சால்வே, 19 எம்எல்ஏக்களுக்கு எதிராக சபாநாயகரின் தகுதிநீக்க நோட்டீஸ் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றார்.
ராகுல் பதவி விலகியதும்.. எனது சுயமரியாதை போயிற்று.. அவமானமே விஞ்சியது.. மவுனம் கலைத்த சச்சின் பைலட்!
இதையடுத்து இந்த வழக்கை நீதிபதி இன்றைக்கு ஒத்திவைத்துள்ளார். மேலும் சச்சின் பைலட்டும் அவரது 18 ஆதரவு எம்எல்ஏக்களும் தகுதிநீக்க நோட்டீஸுக்கு எதிராக புதிய மனுவை தாக்கல் செய்யுமாறும் அந்த மனுவை புதிதாக அமையவுள்ள டிவிஷன் பெஞ்ச் விசாரிக்கும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.