ராஜஸ்தான் ஆண்களின் மாநிலம்.. அதனால்தான் பலாத்காரம் அதிகம் நடக்கிறது! காங்கிரஸ் அமைச்சர் பகீர் பேச்சு
ஜெய்ப்பூர்: பலாத்கார வழக்குகளில் ராஜஸ்தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இதில் சந்தேகம் வேண்டாம். ஏனென்றால் இது ஆண்களின் மாநிலம் என சட்டசபையில் காங்கிரஸ் அமைச்சர் சாந்தி தாரிவால் பேசியது சர்ச்சையாகி உள்ளது. இதற்கு தேசிய பெண்கள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், வாய் தவறி கூறிவிட்டதாக தெரிவித்துள்ள சாந்தி தாரிவால் மன்னிப்பு கேட்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். இவரது அமைச்சரவையில் சட்டசபை விவகாரத்துறை அமைச்சராக சாந்தி தாரிவால் உள்ளார்.
ராஜஸ்தானில் தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. சட்டசபையில் எதிர்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு சாந்தி தாரிவால் பதிலளித்து பேசினார். அப்போது அவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

ஆண்களின் மாநிலம்
பலாத்கார சம்பவங்கள் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் சாந்தி தாரிவால் சட்டசபையில் பதிலளித்து பேசினார். அவர் கூறுகையில், ‛‛பலாத்கார வழக்குகளில் ராஜஸ்தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இதில் சந்தேகம் வேண்டாம். பலாத்கார வழக்குகளில் நாம் ஏன் முதலிடம் இருக்கிறோம் என்பதை பார்க்க வேண்டும். ஏனென்றால் ராஜஸ்தான் ஆண்களின் பூமியாகும்'' என்றார். அமைச்சரின் இந்த பதிலை கேட்டு உடனிருந்தவர்கள் சிரித்தனர். அவையும் சிரிப்பலையில் மூழ்கியது. இது சர்ச்சையாகி உள்ளது.

பாஜக கண்டனம்
இதுதொடர்பான வீடியோவை பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் சேஷாத் தனது டுவிட்டர் பக்தத்தில் வெளியிட்டுள்ளதோடு, ‛‛இது அதிர்ச்சியளிக்கிறது. அருவருப்பாக உள்ளது. ஆனால் ஆச்சரியமளிக்கவில்லை. ஏனென்றால் அமைச்சர் சாந்தி தாரிவால் பலாத்காரத்தை சட்டபூர்வமாக்குகிறார்''என குறிப்பிட்டுள்ளார். மேலும், ராஜஸ்தான் பாஜகவின் தலைவர் சதீஷ் பூனியா தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இந்த சர்ச்சை கருத்து மூலம் பெண்களை இழிவுபடுத்துவதோடு, ஆண்களின் கண்ணியத்தையும் அவர் குறைத்துள்ளார். இவர் மீது பிரியங்கா காந்தி என்ன நடவடிக்கை எடுக்க உள்ளார். இதற்கு என்ன பதில் கூற உள்ளார்'' என கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்கள் ஆணையம்
மேலும் சாந்தி தாரிவாலுக்கு தேசிய மகளிர் ஆணையமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையத்தின் தலைவி ரேகா ஷர்மா தனது டுவிட்டர் பதிவில், "ராஜஸ்தானில் இதுபோன்ற அமைச்சர்கள் உள்ளதால் தான் ஆண்களின் அடக்குமுறை சம்பவங்களுக்கு பெண்கள் ஆளாகி வருகின்றனர். இதுபோன்ற அமைச்சர்கள் இருந்தால் பெண்கள் எப்படி பாதுகாப்பாக உணர்வார்கள். தேசிய பெண்கள் ஆணையம் அவர் மீது கடும் நடவடிக்கையை மேற்கொள்ளும்'' என கூறியுள்ளார்.

மன்னிப்பு கோருவேன்
இதன் தொடர்ச்சியாக கடும் எதிர்ப்பு, சர்ச்சை எழுந்துள்ளதால் அமைச்சர் சாந்தி தாரிவால் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛பெண்கள் மீது மரியாதையும், மதிப்பும் எனக்கு உள்ளது. அனைத்து துறைகளிலும் அவர்கள் சாதிக்க வேண்டும் என்பதை விரும்புவன் நான். வாய் தவறி இப்படி கூறி விட்டேன். இதற்கு சட்டசபையில் மன்னிப்பு கோர உளளேன்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications