குப்புறப்படுத்த நிலையில் பெண் ஆசிரியருக்கு மசாஜ்.. ராஜஸ்தான் அரசுப் பள்ளி அவலம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில், அரசுப்பள்ளி வகுப்பறையில் ஒரு பெண் ஆசிரியர் குப்புறபடுத்த நிலையில் படுத்திருக்கிறார். அவரின் கால் பகுதிக்கு மாணவர் ஒருவர் மசாஜ் செய்கிறார். இதை அங்கிருந்த மற்றொரு ஆசிரியரும், மாணவர்களும் வேடிக்கை பார்த்தனர். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி கூடங்கள் அதிக சர்ச்சைகள் நடக்கும் இடமாக மாறிவிட்டது. ஒருபக்கம் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக உள்ளன. மறுபக்கம் பள்ளிகளில் சாதிய ரீதியான ஒடுக்குமுறைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பணியை சரியாக செய்யும் ஆசிரியர்கள் குறைவாகவும், சம்பிரதாயத்துக்கு கூட பணி செய்யாத ஆசிரியர்கள் அதிகமாகவும் இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் வருகின்றன.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அரசுப்பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்தர்புரா அரசு தொடக்கப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். பொதுவாக வகுப்பறையில் ஆசிரியர், மாணவர்களுக்கு பாடம் எடுப்பார். சில நேரம் கலகலப்பாக பேசலாம், கதை சொல்லலாம். ஆனால் சமீபத்தில் வெளியான வீடியோவில் பெண் ஆசிரியர் ஒருவர் குப்புற படுத்துக் கொண்டிருக்கிறார். அவரின் கால்களில் ஏறி மாணவர்கள் மசாஜ் செய்து கொண்டிருந்தனர்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. அந்த ஆசிரியரின் பெயர் ரேகா சோனி. பள்ளி வகுப்பறையில் இப்படியா நடந்து கொள்வது. இவர் மாணவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுப்பார். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பெற்றோர், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் கூறினர்.
இதுகுறித்து ராஜஸ்தான் மாநில கல்வித்துறை அமைச்சர் மதன் திலாவர், வகுப்பறையில் இதுபோன்ற அநாகரீகத்தை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. அதனால் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சன்யுக்த் அபிபவாக் சங் கூறுகையில், கல்வித்துறை இதுபோன்ற பொறுப்பற்ற ஆசிரியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கும் இந்த சம்பவங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிடின், மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
இதேபோல அனுப்கார் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் வேலை வாங்கியுள்ளார். இந்தப் பிரச்னை குறித்தும் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆசிரியர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து கொள்ளாமல், மாணவர்களிடம் அத்துமீறினால் உரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பெற்றோர் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய பெண் ஆசிரியர் ரேகா சோனி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. சஸ்பென்சனில் உள்ள இந்த காலகட்டத்தில் ரேகா, பள்ளிக் கல்வித்துறை இயக்ககத்தில் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஆசிரியர் ரேகாவுக்கு ஆதரவாகவும் கருத்துகள் பகிர்ந்து வருகின்றன. சம்பவத்தின்போது ஆசிரியரின் உடல்நிலை எப்படி இருந்தது என தெரியவில்லை. அவருக்கு உண்மையில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தால், மாணவர்களிடம் உதவி கேட்பது தவறில்லை. எனவே கல்வித்துறை அதையும் விசாரித்து பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications