ராஜ்யசபாவில் 5 சதவீதம் மட்டுமே வருகை பதிவு வைத்துள்ள சச்சின்: ராஜீவ் சுக்லா சாடல்
டெல்லி: ராஜ்யசபா உறுப்பினராக உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவைக்கு குறைவான நாட்களே வருகை தந்திருப்பது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் சுக்லா கடுமையாக சாடியுள்ளார். அவைக்கு சரியாக வராதவர்கள் எதற்கு எம்.பி பதவியை பெற சம்மதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
காங்கிரஸ் நியமனம்
கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கிரிக்கெட் வீரர் சச்சினை மாநிலங்களவை உறுப்பினராக அக்கட்சிதான் நியமித்தது. இந்த நிலையில், அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும், ஐபிஎல் முன்னாள் தலைவருமான ராஜீவ் சுக்லாவாலேயே தற்போது சச்சின் கடுமையாக விமர்சிக்கப்படுள்ளார்.
95 சதவீத ஆப்சென்ட்
மாநிலங்களவையில் சச்சின் வெறும் 5 சதவீத வருகைப் பதிவைத் தான் கொண்டுள்ளார் என்றும், மாநிலங்களவைக்கு வரமுடியவில்லை என்றால், ஏன் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், முன்னாள் ஐபிஎல் தலைவரும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
அடுத்த கூட்டத்தொடரில் அசத்துவார்
இதுகுறித்து சச்சினுடன் பேசியதாகவும், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருந்து அவர் ஒழுங்காக ராஜ்யசபாவுக்கு வருகை தருவதாக கூறியதாகவும் நிருபர்களிடம் ராஜீவ் சுக்லா தெரிவித்தார். இதேபோல காங்கிரசால் எம்.பியாக்கப்பட்ட நடிகை ரேகாவுடனும் பேசியிருப்பதாகவும், அவரையும் அவைக்கு தவறாமல் வரும்படி கூறியுள்ளதாகவும் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.
விளையாட்டு நிகழ்ச்சிகள்
விம்பிள்டன் டென்னிஸ், புரோ கபடி போன்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுவந்ததால் சச்சின் டெண்டுல்கர் ராஜ்யசபாவுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆடுகளத்தில் அதிக சராசரி வைத்திருந்த சச்சின், மாநிலங்களவையில் 5 சதவீத சராசரி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.