அஸ்ஸாமை புரட்டிப் போட்ட கனமழை- 18 பேர் பலி; ராஜ்நாத்சிங் ஆய்வு
குவஹாத்தி: அஸ்ஸாமில் தொடர் மழையால் மாநிலம் முழுவதும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 22 மாவட்டங்கள் வெள்ள நீரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் சுமார் 18 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அங்கு மழை தொடர்பான சம்பவங்களில் 18 பேர் பலியாகியுள்ளனர்.
இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று அஸ்ஸாம் மாநிலத்தின் வெள்ளப்பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்டார். மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோரும் ராஜ்நாத்சிங்குடன் சென்றனர்.
பின்னர் கவுகாத்தியில் முதல்வர் சோனோவாலுடன் வெள்ளச் சேதம் குறித்து ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார். இந்த பெருமழையால் அஸ்ஸாமில் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கிப் போயுள்ளது.