மக்களை ஏமாற்றிய மோடிக்கு தண்டனையாக பா.ஜ.க.வை தோற்கடியுங்கள்... பீகாரில் ராம்ஜெத்மலானி பிரசாரம்
பாட்னா: மக்களின் நம்பிக்கையை மோசடி செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தண்டனையாக பீகார் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ராம்ஜெத்மலானி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெத்மலானி பேசியதாவது:
லோக்சபா தேர்தலில் நாட்டின் பிரதமராக மோடியை முன்னிறுத்தி பிரசாரம் செய்ததற்கான பரிகாரம் தேடி தற்போது வந்துள்ளேன்.
நரேந்திர மோடியை ஒரு தேவதூராகத்தான் நான் நினைத்தேன்.. ஆதரித்தேன்.. ஆனால் ஏமாந்து போய்விட்டேன்.
அவர் மக்களின் நம்பிக்கையை மோசடி செய்துவிட்டார். அவருக்கான தண்டனையை பீகார் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதன் மூலம் வழங்க வேண்டும்.
பா.ஜ.க.வின் தோல்வி என்பது பீகாரில் இருந்து தொடங்க வேண்டும் என விரும்புகிறேன். ஆகையால் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்க முந்தைய காங்கிரஸ் அரசும் தற்போதைய பாரதிய ஜனதா அரசும் உருப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.
நமது நாட்டுக்கு கருப்புப் பணம் கொண்டுவரப்பட வேண்டும் என விரும்பினால் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், தற்போதைய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி இருவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும்.
ஜெர்மனியில் கருப்புப் பணத்தைப் பதுக்கிவைத்துள்ள 1,400 நபர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு எழுத்துபூர்வமாகக் கோரிக்கை விடுத்திருக்க வேண்டும். அப்படி கோரிக்கை விடுக்கப்பட்டால் ஜெர்மனி அரசு அந்தப் பெயர்களை வெளியிடவும் தயாராக இருந்தது.
இதுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் பல தலைவர்களுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் ஒருவர் கூட பதிலளிக்கவில்லை. என்னை முட்டாளாக்கியது போல், பீகார் மக்களையும் பாரதிய ஜனதா கட்சி முட்டாளாக்க முடியாது.
இவ்வாறு ராம்ஜெத்மலானி கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியில் இருந்த ராம்ஜெத்மலானி, அக்கட்சித் தலைவர்களுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி வந்தார். இதனால் 2013ஆம் ஆண்டு அவர் கட்சியில் இருந்து 6 ஆண்டுகாலத்துக்கு நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.