மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார நினைவு நாள்: டெல்லியில் குற்றங்கள் இருமடங்கான அவலம்
டெல்லி: கடந்த வருடம் இதேநாளில் தான் ஓடும் பேருந்தில் நண்பரோடு பயணம் மேற்கொண்ட மருத்துவ மாணவி 6 காமுகர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு படுகொலை செய்யப் பட்டார். இந்தியாவின் தலைநகரில் நடந்த இந்தக் கோடூரச சம்பவத்தால் உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவில் பாதுகாப்புக் குறித்து கேள்விக்குறி உண்டானது.
சரியாக இன்றோடு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், டெல்லியில் பாலியல் குற்றங்கள் குறைவதற்கு பதிலாக இருமடங்காக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அதிர்ச்சிச் சம்பவம்....
நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை உண்டாக்கிய டெல்லி கற்பழிப்புச் சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி தான் நடைபெற்றது. நண்பரோடு சினிமா பார்த்து விட்டுத் திரும்பிய துணை மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் 6 காமுகர்களைக் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப் பட்டு நடுரோட்டில் வீசப் பட்டார்.

சட்டதிருத்தம்....
சிகிச்சைப் பலனின்றி அம்மாணவி டிசம்பர் 29ம் தேதி சிங்கப்பூரில் உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு கற்பழிப்பு வழக்கில் சிக்கிவர்களுக்கு தண்டனையை கடுமையாக்கி சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

அதிக வழக்குகள்....
அதன்பின்னர் டெல்லியில் கற்பழிப்பு சம்பவங்கள் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை.டெல்லியில் கடந்த 13 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் அதிகபட்ச கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விழிப்புணர்வு....
டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்துக்கு பின்னர் இதுகுறித்த விழிப்புணர்வு பெண்களிடம் ஏற்பட்டுள்ளது. முன்பு கற்பழிப்பு சம்பவங்கள் வெளியே வராது. இப்போது பெண்கள் துணிச்சலுடன் போலீஸ் நிலையம் வந்து புகார் செய்கின்றனர். அதனால்தான் கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை பெருகி உள்ளது என்று டெல்லி போலீஸ் விளக்கமளித்துள்ளது.

இருமடங்கு அதிகரிப்பு....
இது குறித்து டெல்லி போலீஸ் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், ‘இந்த ஆண்டு கடந்த நவம்பர் 30-ந்தேதி வரை 11 மாதங்களில் அங்கு 1,493 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன. 2012-ம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை விட இது இரு மடங்குக்கும் அதிகமாகும்.

பலாத்கார வழக்குகள்...
2010-ம் ஆண்டு 507, 2011-ம் ஆண்டு 572, 2012-ம் ஆண்டு 706 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளன.

பாலியல் தொல்லை குற்ற வழக்குகள்...
பாலியல் தொல்லை குற்ற வழக்குகள் இந்த ஆண்டு 5 மடங்குகளாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, நவம்பர் 30-ந்தேதி வரை 11 மாத காலத்தில் 625 வழக்குகள் பதிவாகின. இந்த ஆண்டு இந்த வழக்குகளின் எண்ணிக்கை 3,237 ஆக உயர்ந்துள்ளது.

6 மடங்கு....
பெண்களை மானபங்கப்படுத்துதல், கேலி கிண்டல் செய்தல், பின்தொடர்ந்து செல்லுதல் உள்ளிட்ட வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 165 ஆக இருந்தது. இந்த ஆண்டு அது 852 என எகிறி உள்ளது.












Click it and Unblock the Notifications