தேர்தல் பிரசாரத்தில் இனி பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்த கூடாது: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
தேர்தல் பிரசாரத்தின் போது பிளாஸ்டிக் கொடி, பேன்ர்களை பயன்படுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தடைவிதித்துள்ளது.
டெல்லி: அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்த 6 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுங்கள் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த ரவிகிரண் சிங் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தேர்தல்களின் போது அரசியல் கட்சிகளின் பிரசாரங்களில் பிளாஸ்டிக் பேனர்கள், கொடிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் முடிந்தவுடன் அவை குப்பையில் சேர்ந்து சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு ஏற்படுத்துகிறது.
பிளாஸ்டிக் கொடிகள், பேனர்களை பயன்படுத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் தடை விதிக்கும் வகையில் தேர்தல் கமிஷன் விதிகளை ஏற்படுத்த வேண்டும். அதையும் மீறி பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி சுவதந்தர் குமார், அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் பயன்படுத்துவதை தடை செய்யவோ அல்லது ஒழுங்குபடுத்தவோ 6 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.